புதுச்சேரி: புதுவை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 10-ம் தேதி தேதி தொடங்கவிருப்பதாக சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம் அறிவித்துள்ளார்.
இது குறித்து சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
புதுவையில் 15-வது சட்டப்பேரவையின் 3-வது கூட்டத்தொடர், ஆகஸ்ட் 10-ம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. காலை 9:30 துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் துவங்குகிறது.
இதைத்தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்வார். இந்த முறை முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் கூடி, எத்தனை நாட்கள் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடத்துவது என தீர்மானித்து முடிவு செய்து பின்னர் அறிவிக்கப்படும். சட்டப்பேரவைக்குள் பதாகைகள், முழக்கம் இடுவது போன்றவை தடை செய்யப்படுகிறது.
சட்டப்பேரவை கூட்டத்தில் முதல்வர் உறுதியளித்த திட்டங்கள் பெரும்பான்மையாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. அனைத்து திட்டங்களும் 100% நிறைவேற்ற இந்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம் தெரிவித்தார். உடன் சட்டப்பேரவை செயலாளர் முனுசாமி இருந்தார்.