புதுச்சேரி: புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த வேன், திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி அருகே எல்லைபிள்ளைச்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் பச்சியப்பன். வாகனங்களை வாடகைக்கு விடும் டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகிறார். பச்சியப்பன் தனது டிராவல்ஸ் வேன் ஒன்றை பழுது நீக்கம் செய்வதற்கு, மேட்டுப்பாளையத்தில் உள்ள பணிமனையில் வேலை பார்த்துவிட்டு, சனிக்கிழமை மீண்டும் எல்லைபிள்ளைச்சாவடிக்கு எடுத்துச் சென்றார்.
அப்போது, பிற்பகல் மேட்டுப்பாளையம் பான்லே நிறுவனம் எதிரில் வேன் வந்தபோது திடீரென முன்பகுதியில் தீப்பற்றி எரிந்துள்ளது.
தீ வாகனம் முழுவதும் பரவியதையடுத்து, உடனடியாக ஓட்டுனர் வாகனத்தை விட்டு இறங்கி சென்று அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
தகவலின் அடிப்படையில், புதுச்சேரி தீயணைப்பு துறையினர், விரைந்து வந்து தீயை அணைத்து வாகனத்தை தீயில் இருந்து மீட்டனர். எனினும் அந்த வாகனத்தின் உள்பகுதி தீயில் கருகி வீணாகியது.
வேன் தீப்பிடித்து எரிந்ததால், அந்தப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.