புதுச்சேரி: பட்டப்பகலில் புது மாப்பிள்ளை வெட்டிக்கொலை
By DIN | Published On : 31st July 2022 11:35 AM | Last Updated : 31st July 2022 11:36 AM | அ+அ அ- |

புதுச்சேரியில் பட்டப்பகலில் திருமணம் ஆன 3 மாதத்தில் புதுமாப்பிள்ளையை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த 7 பேர் கும்பலை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி ஜீவானந்தபுரம் பாரதிதாசன் வீதியை சேர்ந்தவர் அந்தோணிராஜ். இவரது மகன் சாலமன் (வயது 24). பெயிண்டர். சாலமனுக்கும் திருச்சியை சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்ணுக்கும் கடந்த ஏப்ரல் மாதம்தான் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை சாலமன் நாவற்குளம் பகுதியில் உள்ள ஒரு கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் 7 பேர் கும்பல் அவரை நோக்கி அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சென்றனர். அவர்களை கண்டதும் சாலமன் அங்கிருந்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்தார். ஆனால் அவரை விரட்டிய அக்கும்பல் சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சாலமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சீனியர் காவலர் சூப்பிரண்டு தீபிகா, போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம், கோரிமேடு காவல்துறை அதிகாரி பாலமுருகன் மற்றும் காவலர்கள் அங்கு விரைந்து வந்தனர். சாலமன் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இக்கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் சாலமனுக்கும், நாவற்குளம் பகுதியை சேர்ந்த ரகு என்பவருக்கும் இடையே பணம், கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு இருந்துள்ளது. இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு இருதரப்பினருக்கும் இடையே மோதல் நடந்துள்ளது. இந்த மோதல் தொடர்பாக திட்டமிட்டு அவரை கொலை செய்திருக்கலாம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
திருமணம் ஆன 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கணவர் சாலமன் உடலை பார்த்து அவரது மனைவி பிரியதர்ஷினி கதறி அழுதார். இக்கொலை தொடர்பாக ரகு உள்ளிட்ட 7 பேர் கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள்.