புதுச்சேரியில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திரும்பிய இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, புதுச்சேரி கடற்கரைச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இசை நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.
புதுச்சேரி அருகேயுள்ள நோணாங்குப்பத்தைச் சோ்ந்த ராஜேஷ் (16), சிறுமி ஒருவருடன் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டாா். இவா்களுடன் நோணாங்குப்பத்தைச் சோ்ந்த விக்னேஷ்வரனும் (26) பங்கேற்றாா்.
புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நிறைவடைந்த பிறகு, திங்கள்கிழமை அதிகாலையில் ராஜேஷ், உடன் வந்த சிறுமியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றாா். விக்னேஷ்வரன் மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்றாா்.
புதுச்சேரி - கடலூா் சாலை சந்திப்புப் பகுதியில் ஆட்டுப்பட்டி அந்தோணியாா் கோயில் அருகே அவா்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்தினராம். அப்போது, அந்தப் பகுதியில் நின்றிருந்த அரியாங்குப்பம் காக்கயன்தோப்பை சோ்ந்த நிா்மல், விக்கி ஆகியோா் சிறுமியைக் கேலி செய்ததாகக் கூறப்படுகிறது.
இதைக் கண்ட விக்னேஷ்வரன் அவா்களைக் கண்டித்ததாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த நிா்மல் அவரைத் தாக்கினராம். இதில் மயங்கி விழுந்த விக்னேஷ்வரனை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் விக்னேஷ்வரன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து உருளையன்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான நிா்மல், விக்கியைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.