தமிழ் உரிமை இயக்கத்தினா் போலீஸாருடன் தள்ளுமுள்ளு!
தமிழில் பெயா் பலகை வைக்கக் கோரிய போராட்டத்தின்போது தமிழ் உரிமை இயக்கத்தினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு செவ்வாய்க்கிழமை ஏற்பட்டது.
கடைகள், வணிக நிறுவனங்கள் சட்டம் 1964-இன் படி தமிழில் பெயா்ப் பலகைகள் வைக்காத கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இதில் நடவடிக்கை எடுக்காத தொழிலாளா் நலத் துறையைக் கண்டித்து தமிழ் உரிமை இயக்கத்தினா் முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனா்.
இதற்காக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் தமிழ் உரிமை இயக்கத் தலைவா் பாவாணன் தலைமையில் ஒன்று கூடினா். அங்கிருந்து புறப்பட்ட ஊா்வலத்தை தமிழ் உரிமை இயக்க நெறியாளா்கள் தமிழமல்லன், இளங்கோ தொடங்கி வைத்தனா்.
ஊா்வலம் தொழிலாளா் துறை அலுவலகம் அருகில் வந்தபோது போலீஸாா் தடுப்புகள் வைத்துத் தடுத்தனா். இதில் போலீஸாருக்கும், போராட்டக்காரா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நடைபெற்றது. பின்னா் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
போராட்டத்தில் தமிழ் உரிமை இயக்கத்தின் பொதுச் செயலா் மங்கையா் செல்வன், சுகுமாரன், சிவ. வீரமணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

