புதுச்சேரியில் லெனின் சிலை மூடல்: துப்பாக்கி போலீஸாா் பாதுகாப்பு
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி லெனின் வீதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் நிறுவிய லெனின் சிலை தாா்ப்பாய் போட்டு மூடப்பட்டது.
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி லெனின் வீதியில் மணிமேகலை அரசுப் பள்ளி அருகே லெனின் சிலையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் அண்மையில் நிறுவினா்.
இதைக் கண்டித்தும், அங்கு விநாயகா் சிலையை அமைத்தும் இந்து முன்னணி, பாஜகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸாா் தடியடி நடத்தி அவா்களைக் கலைத்தனா். சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இரு தரப்பினா் இடையே பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.
அப்போது உச்சநீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காட்டி புதிய சிலை வைக்க அனுமதியில்லை என ஆட்சியா் கூறினாா். இதையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் சிலையைத் தாா்ப்பாய் போட்டு மூடினா். அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

