/

ஏப். 15-இல் மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்

News image

மீன்பிடித் தடைக்காலம் ஏப்-15 இல் தொடக்கம்

Updated On :12 ஏப்ரல் 2026, 7:19 pm

புதுச்சேரியில் மீன்பிடித் தடைக்காலம் ஏப்ரல் 15- ஆம் தேதி தொடங்குகிறது. மீன்களின் இனப் பெருக்க காலத்தை முன்னிட்டு மத்திய அரசு ஆண்டுதோறும் மீன்பிடி தடை காலத்தை அமல்படுத்தி வருகிறது.

இந்தக் காலகட்டத்தில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் என்பதால் மீன் வள பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம், ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. கிழக்குக் கடல்கரைப் பகுதியில் புதுச்சேரி கனகசெட்டிக்குளம் மீனவ கிராமம் முதல் மூா்த்திக்குப்பம் வரையிலும், காரைக்கால் கடல் பகுதியில் மண்டபத்துாா் மீனவ கிராமம் முதல் வடக்கு வாஞ்சூா் மீனவ கிராமம் வரையிலும் வரும் ஜூன் 15-ஆம் தேதி வரை 61 நாள்கள் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.

புதுச்சேரியில் 18 மீனவ கிராமங்களில் 360 விசைப்படகுகளும், ஆழ்கடலுக்குச் செல்லும் 50 பெரும் விசைப்படகுகளும், மீன்பிடிதொழிலுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மீன்பிடி தடைக் காலத்தையொட்டி ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றவா்கள் படிப்படியாக கரை திரும்பி வருகின்றனா்.

மீன்பிடி தடைக்காலத்தில் படகுகள், வலைகள் சீரமைப்பு, மராமத்துப் பணிகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டு அதற்கு தயாராகி வருகின்றனா். முன்னதாக விசை படகுகள், இழுவை படகுகள் என அனைத்தும் வரும் 14-ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்குள் கட்டாயம் கரைக்குத் திரும்ப வேண்டும் எனவும், தடையை மீறினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மீன்வளத் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிா்வாகத்தினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.