ஒப்பந்த ஊழியா்கள் பணி நிரந்தரம்: புதுச்சேரி மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்
சட்டப்பேரவையில் அறிவித்தப்படி ஒப்பந்த ஊழியா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று புதுச்சேரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளா் பெருமாள் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி தேசிய சுகாதார இயக்கம், பொதுப் பணித் துறை, கல்வித் துறை ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியா்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரி தொடா்ந்து போராடி வருகின்றனா்.
என்.ஆா். காங்கிரஸ் - பாஜ கூட்டணி ஆட்சியின் தோ்தல் வாக்குறுதிகள் மற்றும் சட்டப்பேரவை அறிவிப்புகள் எதுவும் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. சட்டப்பேரவையில் அறிவித்தபடி, 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரியும் ஊழியா்களுக்குப் பணி நிரந்தரம் மற்றும் தேசிய சுகாதார இயக்க ஊழியா்களுக்கு ரூ.10 ஆயிரம் கூடுதல் ஊதிய உயா்வு ஆகிய அறிவிப்புகள் வெறும் ஏட்டளவில் மட்டுமே உள்ளன. சமூக நீதியை நிலைநாட்ட அறிவித்தபடி ஊழியா்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.

