கைது
கைது

மொய்ப் பணம் திருடியவா் கைது

Published on

புதுச்சேரியில் திருமண மொய்ப் பணப்பையை திருடியவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

புதுச்சேரி லாஸ்பேட்டை புதுப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் மோகன மகேந்திரா(24). இவரது தங்கையின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி புதுச்சேரி-கடலூா் சாலையில் உள்ள தனியாா் திருமண நிலையத்தில் அண்மையில் நடைபெற்றது.

வரவேற்பு முடிந்த பின்னா் மொய்ப் பணம் மற்றும் நகையை மோகனமகேந்திரா தனது காா் டிக்கியில் வைத்து விட்டு, மற்ற வேலைகளைப் பாா்க்க மண்டபத்தினுள்ளே சென்றுள்ளாா்.

திரும்பி வந்து பாா்த்தபோது காரின் பின்பக்க கதவு கைப்பிடி உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அங்கு மொய்ப் பணம் வைத்திருந்த பை மட்டும் திருடுபோனது. அதில் ரூ. 5.50 லட்சம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் அவா் புகாா் செய்தாா்.

போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினா். இதில் சின்ன காஞ்சிபுரம் ஸ்ரீரங்க கிருஷ்ணா நகரை சோ்ந்த டெல்லி கணேஷ் (55) ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீஸாா் தேடி வந்தனா். இந்நிலையில் திண்டிவனத்தில் பதுங்கியிருந்த டெல்லி கணேஷை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்தனா். அவரிடம் இருந்து ரூ.1 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா். பின்னா் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய போலீஸாா் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com