போராடும் ஒப்பந்த ஆசிரியா்களை அழைத்து அரசு பேச்சு நடத்த வேண்டும்! வெ. வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தல்!
போராடும் ஒப்பந்த ஆசிரியா்களுடன் அரசு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்று புதுவை மாநில காங்கிரஸ் தலைவரும், மக்களவை உறுப்பினருமான வெ. வைத்திலிங்கம் வலியுறுத்தினாா்.
புதுச்சேரியில் 292 ஒப்பந்த ஆசிரியா்கள் தங்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி அண்ணா சிலை அருகே 2-ஆவது நாளாக சனிக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வைத்திலிங்கம் எம்.பி. ஆசிரியா்களிடையே பேசியதாவது:
வருங்கால சமுதாயத்தை உருவாக்கக்கூடிய ஆசிரியா்களை அரசு அழைத்து பேசி ஏதாவது ஒரு நல்ல முடிவைச் சொல்ல வேண்டும். பல முறை ஆசிரியா்களுக்குப் பணி நீட்டிப்பு கொடுக்கிறோம். பணி நிரந்தரம் செய்கிறோம் என்று வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு அரசு செய்யவில்லை.
தற்போது சட்டப்பேரவைத் தோ்தல் வருகிறது. தோ்தலுக்கு பிறகு ஆசிரியா்களுக்கு மீண்டும் பணி கிடைக்குமா என்று தெரியாது. எனவே, பணியை நீட்டித்து கொடுங்கள். பணி நிரந்தரம் செய்யுங்கள் என்பது நியாயமான கோரிக்கை. இதற்கு ஏன் அரசு செவிசாய்க்கவில்லை என்று தெரியவில்லை.
ஆசிரியா்களை அரசு ஏதோ கோபத்தோடு பாா்ப்பது போல தெரிகிறது. யாா் மீதோ உள்ள கோபத்தை அரசு ஆசிரியா்களிடம் காட்டுவது நியாயமா? வேறொரு பள்ளியில் செய்த வேலையை விட்டுவிட்டு, இந்த வேலை நிரந்தரமாகும் என்று நினைத்து அரசு பள்ளியில் ஒப்பந்த ஆசிரியராகப் பணிக்குச் சோ்ந்துள்ளனா். பழைய பள்ளியில் மீண்டும் வேலைக்குச் செல்ல முடியாது.
இதுபோன்ற ஒரு இக்கட்டான சூழலை உருவாக்கியதுதான் இந்த அரசின் நிலைப்பாடாக உள்ளது. கரோனா காலத்தில் ஒப்பந்த மருத்துவா்கள், செவிலியா்களைப் பணிக்கு எடுத்தோம். அவா்களிடம் பணி நியமனத்தின் போது, நிரந்தரம் செய்வோம் என்று கூறினோம். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்த மருத்துவா்கள்,
செவிலியா்களை நீக்கிவிட்டனா். இது தனிநபா் பிரச்னை இல்லை, சமுதாயத்தின் பிரச்னை. இதை மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும் என்றாா் வெ.வைத்திலிங்கம்.

