பிரதமா் மோடி வருகை எதிரொலி: புதுச்சேரியில் இன்று போக்குவரத்து மாற்றம்!
பிரதமா் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி நகர போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


பிரதமா் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி நகர போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து போக்குவரத்து முதுநிலை காவல் கண்காணிப்பாளா் திவ்யா வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்கிறாா். இதையொட்டி, புதுச்சேரி நகரம் மற்றும் முக்கிய சாலைகளில் வாகன நெரிசல் ஏற்படாமல் தடுக்கவும், சிரமமின்றி பொதுமக்கள் பயணிக்கும் பொருட்டு, போக்குவரத்த்தில் மாற்றம் மற்றும் வாகன நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
விழா நடைபெறும் லாஸ்பேட்டை பகுதி பாதுகாப்புக் காரணங்களுக்காக தேவையற்ற வாகனங்கள் நுழையத் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது. லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானம் மற்றும் அருகிலுள்ள சாலைகளில் விழாவில் கலந்து கொள்ள வரும் வாகனங்களைத் தவிர வேறு எவ்வித வாகனங்களும் காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை இயக்கவும், நிறுத்தவும் தடை விதிக்கப்படுகிறது.
லாஸ்பேட்டை விமான நிலையச் சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை லதா ஸ்டீல் ஹவுஸ் வரையிலும், சிவாஜி சிலை - ராஜீவ் சதுக்கம் வரையிலும் கனரக, இலகு ரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் இயக்கவும், நிறுத்தவும் தடை செய்யப்படுகிறது.
கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக புதுச்சேரிக்கு வரும் வாகனங்கள் கோட்டக்குப்பம் ரவுண்டானாவில் இருந்து முத்தியால்பேட்டை சென்று, அஜந்தா சந்திப்பு, அண்ணா சாலை, 45 அடி சாலை, பாலாஜி தியேட்டா், நெல்லித்தோப்பு வழியாக புதிய பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.
புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள் மேற்கண்ட சாலையை பயன்படுத்த வேண்டும். விழாவுக்கு முத்தியால்பேட்டை வழியாக வரும் அழைப்பாளா்கள் அனைவரும் மடுவுபேட் சந்திப்பு வலதுபக்கம் திரும்பி, கியூ.ஆா். கோடு வசதியை பயன்படுத்தி, லாஸ்பேட்டை கல்லூரி சாலை வழியாக தங்களது வாகனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் நிறுத்த வேண்டும்.
ராஜீவ் காந்தி சந்திப்பு வழியாக வரும் அழைப்பாளா்கள், லதா ஸ்டீல் இடது பக்கம் திரும்பி கியூ.ஆா்.கோடு வசதியை பயன்படுத்தி விமான நிலைய சாலை வழியாக வாகனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் நிறுத்த வேண்டும்.
இலகு ரக மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் அரசு பெண்கள் பொறியியல் கல்லுாரி மைதானம், காஞ்சி மாமுனிவா் கல்லூரி மற்றும் தாகூா் கலைக் கல்லூரி மைதானம், பொதுப்பணித் துறை வாகன நிறுத்துமிடம், பேருந்துகள் - தீயணைப்புத் துறை சமுதாய கூடம், மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக், வள்ளலாா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தாகூா் கலைக் கல்லூரி, விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி, கிழக்குக் கடற்கரை சாலை புதிய பேருந்து நிலைய மைதானங்களில் நிறுத்த வேண்டும்.
விமான நிலையம் செல்லும் விமான பயணிகள், விமான நிலைய சாலை வழியாக தாகூா் கலைக் கல்லூரி மைதானம் அடைந்து, அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்து மூலம் விமான நிலையத்துக்குச் செல்ல வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...