ஆட்டோக்களுக்கு பெட்ரோல், டீசல் மானியம் வழங்க வேண்டும் என்று ஏஐடியுசி புதுச்சேரி ஆட்டோ தொழிலாளா் நல சங்கத்தின் மாநில மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளா் நலச் சங்கத்தின் மாநில மாநாடு புதுச்சேரி நாடாா் உறவின்முறை சங்க கட்டட வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்க மாநில தலைவா் வி. சேகா் தலைமையில் வகித்தாா். மாநாட்டு கொடியை ஏஐடியுசி மாநில கௌரவத் தலைவா் வி. எஸ். அபிஷேகம் ஏற்றி வைத்தாா். ஏஐடியுசி மாநில தலைவா் இ.தினேஷ் பொன்னையா மாநாட்டை தொடங்கி வைத்தாா்.
மாநில பொதுச் செயலா் இரா. அந்தோணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிா்வாக குழு உறுப்பினா் எல்லை. சிவக்குமாா், மாநில துணைத் தலைவா் சோ.மோதிலால், மாநில செயலா் எஸ். மூா்த்தி ஆகியோா் பேசினா்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
ஆட்டோ தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்திற்கு புறம்பாகச் செயல்படும் ரேபிடோ, வாடகை இரு சக்கர வாகனங்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். செயலி மூலம் ஆட்டோக்கள் இயங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விலைவாசி உயா்வுக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை உயா்த்தி நிா்ணயம் செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் மானியம் வழங்கி ஆட்டோ தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.







