வானூரில் பிளஸ் 1 மாணவி மர்மமாக இறந்தது குறித்து போலீஸார் நடவடிக்கை எடுக்காததால், பிரேத பரிசோதனை முடிந்த பின்பு உடலை வாங்க உறவினர்கள் மறுத்தனர். பின்னர் எஸ்.பி. மனோகரன் நடவடிக்கை எடுக்க உறுதியளித்ததை அடுத்து உடலைப் பெற்றனர்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே ருக்மணிபுரத்தைச் சேர்ந்தவர் சேகர் மகள் கல்கி(16). இவர் வானூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். வியழக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தார். மதியம் இயற்கை உபாதைக்காக வீட்டின் பின்புறமுள்ள சவுக்கு காடுக்குச் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.
சந்தேகமடைந்த அவரது தாய் தேன்மொழி, சவுக்கு காட்டுக்கு தேடிச் சென்ற போது, அங்குள்ள மரத்தில் சுடிதார் துப்பட்டாவில் தூக்கில் தொங்கியவாறு கிடந்துள்ளார். தகவல் அறிந்த வானூர் போலீஸார் வந்து உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
வெள்ளிக்கிழமை காலை மாணவி மர்ம சாவு குறித்து முறையாக விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, கல்கியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வானூர் வட்டாட்சியர் குமாரபாலன், கோட்டக்குப்பம் போலீஸ் துணை கண்காணிப்பாளர் முருகேசன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டோரிடம் பேசி சமாதானம் செய்ததையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. சனிக்கிழமை பிரேத பரிசோதனை முடிந்து கல்கி உடலை போலீஸார் உறவினர்களிடம் வழங்கினர். போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி மறுத்தனர்.
தொடர்ந்து மாவட்ட எஸ்.பி. சு.மனோகரன் அங்கு வந்து உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்ததை அடுத்து உறவினர்கள் கல்கியின் உடலைப் பெற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.