மரக்காணம் அருகே நடந்த கலவரத்தில் பா.ம.க. பிரமுகர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸார் மரக்காணம் பகுதியில் சனிக்கிழமை விசாரணை நடத்தினர்.
மாமல்லபுரத்தில் கடந்த 25-ஆம் தேதி வன்னியர் சங்கம் சார்பில் வன்னியர் இளைஞர் பெருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பா.ம.க. தொண்டர்கள் கிழக்குக் கடற்கரை சாலை வழியாக வாகனங்களில்
சென்றனர்.
மரக்காணம் அருகே செல்லும் போது இவர்களுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையில் கலவரம் ஏற்பட்டது. இதில் பஸ்கள் எரிக்கப்பட்டன. வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டன. இந்தக் கலவரத்தில் அரியலூரைச் சேர்ந்த பா.ம.க. தொண்டர் செல்வராஜ் கழிக்குப்பம் பகுதியில் இறந்தார்.
அவர் விபத்தில் உயிரிழந்ததாக மரக்காணம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் பிரேத பரிசோதனையின் போது செல்வராஜ் அடித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து செல்வராஜ் இறந்த வழக்கை கொலை வழக்காக மரக்காணம் போலீஸார் மாற்றினர்.
இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனப் பா.ம.க.வினர் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான சி.பி.சி.ஐ.டி. போலீஸார் மரக்காணம், செல்வராஜ் இறந்து கிடந்த கழிக்குப்பம் ஆகிய பகுதிகளில் விசாரணை நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









