கட்டுமானத் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி, விழுப்புரத்தில் தமிழ்நாடு கட்டடத் தொழிலாளர்கள் சங்கம்(சிஐடியு) சார்பில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆ.சௌரிராஜன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் ஜெகக்கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி.பரமசிவம், கே.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் எம்.ராஜேந்திரன் தொடங்கி வைத்துப் பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.வி.சரவணன், ஏஐடியுசி முன்னாள் மாவட்டப் பொதுச் செயலர் ஆ.இன்பஒளி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பாலமுருகன், பழனிவேல், ராஜி, சேகர் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
தமிழகத்தில் கட்டுமானத் தொழிலுக்குத் தேவையான மணலை இறக்குமதி செய்ய வேண்டும். மணலுக்கு மாற்றாக உள்ள எம்.சாண்ட் உற்பத்தியை ஊக்கப்படுத்தி, மணல் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசின் கட்டுமானப் பணிகளில், உள்ளூர் தொழிலாளர்களுக்கு 80 சதவீதம் வேலை வழங்க சட்டத்தை இயற்ற வேண்டும். மணல் பிரச்னையால் வேலையின்றி தவித்து வரும், கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நலவாரியம் மூலம் ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். உள்ளூர் கட்டுமானப் பணிகளுக்கு மாட்டு வண்டிகள் மூலம் கட்டணம் செலுத்தி மணல் எடுக்க உரிய அனுமதியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கட்டுமானத் தொழிலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.