திருக்கோவிலூர் அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி உயிரிழந்தார். இதுதொடர்பாக இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
திருக்கோவிலூரை அடுத்த அத்தண்டமருதூரைச் சேர்ந்தவர் ராமலிங்கம்(55). இவர், நெற்குணம் கிராம எல்லையில் நிலம் வாங்கி விவசாயம் செய்து வருகிறார்.
இவரது நிலத்தையொட்டி, நெற்குணம் கிராமத்தைச் சேர்ந்த வேணுகோபால்(47) என்பவரும் விவசாயம் செய்து வந்தார்.
வெள்ளிக்கிழமை மாலை ராமலிங்கத்தின் நிலத்தில், வேணுகோபால் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவலறிந்த அவரது உறவினர்கள், வேணுகோபாலுக்கு வழக்கம்போல் ரத்தம் அழுத்தத்தினால் மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்தாகக் கருதி, அவரது சடலத்தை சனிக்கிழமை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர்.
சடலத்தை மயானத்துக்குக் கொண்டு சென்றபோது, உடலில் காயம் இருந்தது தெரியவந்ததையடுத்து, மின்வேலியில் சிக்கி காயம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகமடைந்து, அரகண்டநல்லூர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் மின்சாரம் தாக்கி வேணுகோபால் உயிரிழந்ததை உறுதி செய்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து, சடலத்தை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ராமலிங்கம் நிலத்தில் காட்டுப் பன்றிக்காக அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி வேணுகோபால் இறந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகம் அடைந்தனர்.
இதையடுத்து ராமலிங்கம் மகன் மணிகண்டன் (25) என்பவரை போலீஸார் கைது செய்தனர். சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.