பொது நூலகங்களுடன் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தும் வாசகர் வட்டத்துக்கு நூலக ஆர்வலர் விருது வழங்கப்படும் என அறிவித்த தமிழக முதல் வருக்கு திருக்கோவிலூர் கிளை நூலக வாசகர் வட்டம் நன்றி தெரிவித்தது.
இதுகுறித்து, நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிமாமணி சிங்கார.உதியன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பார்வையற்ற மற்றும் பார்வைக் குறைபாடு உள்ள வாசகர்களின் நலனுக்காக, கணினிகள் மூலமாக நவீன தொழில்நுட்பத்துடன் பேசும் கருவி, பேசும் புத்தகம், மென்பொருள், கற்றல் உபகரணம், தொடுதிரை, சிறப்பு விசைப்பலகை, ஒலிப்புத்தகம் ஆகிய வசதிகளைக் கொண்ட தனிப்பிரிவு மாவட்ட மைய நூலகங்களில் ஏற்படுத்தப்படும். தமிழகத்தில் வட்ட அளவில் வாசகர் பயன்பாடு அதிகம் உள்ள 30 நூலகங்கள் தேர்வு செய்யப்பட்டு, சிறப்பு மென்பொருள்களைப் பயன்படுத்தி நூல்கள் வழங்குதல் மற்றும் திரும்பப் பெறுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளவும், நூலகங்களை ஒருங்கிணைக்கவும், வாசகர்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களை விரைவாகப் பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுநூலகங்களுடன் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி வரும் வாசகர் வட்டத்தை சிறப்பிக்கும் வகையில், மாவட்ட அளவில் ஒருவருக்கு நூலக ஆர்வலர் விருதும், ரூ.5 ஆயிரம் ரொக்கமும் அளிக்கப்படும். மாணவ, மாணவிகளின் சிந்தனைத் திறன், நற்பண்புகள், பேச்சாற்றல், எழுத்தாற்றல் போன்ற புதிய படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகளை நடத்தி மாவட்ட அளவில் வெற்றிபெறும் மாணவ, மாணவியருக்கு இளம் படைப்பாளர் விருது அளிக்கப்படும் என்றும், சட்டப்பேரவையில் அறிவித்த முதல்வருக்கும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கும் நூலக வாசகர் வட்டம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.