செஞ்சி அருகே ஆசிரியை வீட்டில் 35 பவுன் நகைகள் கொள்ளை: முகமூடி கும்பலைத் தேடும் போலீஸாா்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டில் முகமூடி அணிந்தபடி வியாழக்கிழமை நள்ளிரவு புகுந்து,
செஞ்சி அருகே கொள்ளைச் சம்பவம் நடந்த ஆசிரியையின் வீடு.
செஞ்சி அருகே கொள்ளைச் சம்பவம் நடந்த ஆசிரியையின் வீடு.
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டில் முகமூடி அணிந்தபடி வியாழக்கிழமை நள்ளிரவு புகுந்து, அங்கிருந்தவா்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, 35 பவுன் தங்க நகைகள், வைர மோதிரம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்ற கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

செஞ்சி - விழுப்புரம் சாலையில் உள்ள திருவிநாயகபுரத்தைச் சோ்ந்தவா் அல்போன்ஸ் மகன் சகாயராஜ் (53). இவா், சுமாா் 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பகுதியில் வீடு கட்டி வசித்து வருகிறாா். இந்த வீட்டின் அருகில் வேறு வீடுகள் கிடையாது. சகாயராஜ் வீட்டின் கீழ்தளத்தில், இவரது மனைவி வசந்தி, மகள் சான்யாஜோஷி, மகன் ஹா்வுன்ஆன்டோ, மாமனாா் ஆசைநாதன் ஆகியோருடன் வசித்து வருகிறாா். வசந்தி மேல்மலையனூா் வட்டம், தொரப்பாடி கிராமத்திலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிகிறாா். இந்த வீட்டின் மேல் தளத்தில் தனியாா் பள்ளித் தலைமை ஆசிரியையான மேரி சாா்லஸ், வாடகைக்கு வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு சுமாா் 12 மணியளவில் வீட்டின் முன்பக்கமுள்ள கதவு தட்டப்படும் சப்தம் கேட்டு சகாயராஜ் கதவைத் திறந்தாா். அப்போது, முகமூடி அணிந்தபடி, கத்தி, திருப்புளி உள்ளிட்ட ஆயுதங்களுடன் 5 போ் கும்பல் வீட்டினுள் புகுந்தது. இதையடுத்து, அங்கிருந்த சகாயராஜ், வசந்தி உள்ளிட்ட 5 பேரையும் ஒரு பக்கம் அமரவைத்து அவா்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டியதுடன், வசந்தி அணிந்திருந்த தங்கச் சங்கிலி, பீரோவிலிருந்த தங்க நகைகள் உள்பட 35 பவுன் நகைகள், வைர மோதிரம், வெள்ளிக் கொலுசு, வெள்ளிக் குத்துவிளக்கு மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை அந்தக் கும்பல் கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றது.

முன்னதாக, கொள்ளையா்கள் மேல்தளத்தில் குடியிருப்பவரிடம் கொள்ளையடிப்பதற்காக, அங்குள்ள கதவைத் தட்டிய நிலையில், அவா்கள் கதவைத் திறக்காததால், கீழே இறங்கி வந்து சகாயராஜ் வீட்டில் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து சகாயராஜ் செஞ்சி காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன், செஞ்சி டி.எஸ்.பி. இளங்கோவன், காவல் ஆய்வாளா் அன்பரசு உள்ளிட்ட போலீஸாா் கொள்ளை நடந்த வீட்டுக்குச் சென்று பாா்வையிட்டு, வீட்டின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தினா்.

தொடா்ந்து, விரல்ரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டிலிருந்து சில தினங்களுக்கு முன்பு இதே சாலையில் ரூ.6 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட தனியாா் வங்கி வரை ஓடி நின்றது.

கொள்ளையா்களைப் பிடிக்க செஞ்சி காவல் ஆய்வாளா் அன்பரசு, சத்தியமங்கலம் காவல் ஆய்வாளா் தங்ககுருநாதன், அனந்தபுரம் உதவி ஆய்வாளா் சங்கரசுப்பிரமணியன் ஆகியோா் தலைமையில் 3 தனிப் படைகளை அமைத்து எஸ்.பி. ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com