திண்டிவனம் அருகே லாரியின் மீது கார் மோதியதில் 3 பேர் பலியானார்கள்.
சென்னை வேளச்சேரியில் வசித்து வரும் அருப்புக் கோட்டையைச் சேர்ந்த சுப்புலட்சுமி குடும்பத்தினர், ஒரு துக்க நிகழ்ச்சிக்காக சனிக்கிழமை அதிகாலை சென்னையிலிருந்து காரில் புறப்பட்டு அருப்புக்கோட்டைக்கு சென்றுகொண்டிருந்தனர்.
சனிக்கிழமை அதிகாலை விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கன்னிகாபுரத்தில், சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றபோது, முன்னால் சென்ற லாரியின் பின்பக்கத்தில் திடீரென மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே சுப்புலட்சுமி (50), கெளதம் (35 ), வேல் பாண்டி (40) ஆகிய 3 பேர் பலியாகினர். மேலும் காரில் வந்த இரண்டு குழந்தைகள் உள்பட 6 பேர் பலத்த காயமடைந்த நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து மயிலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.