ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

பிரச்னைகளிலிருந்து மீளுமா அண்ணாமலைப் பல்கலை.?

பாரம்பரியமிக்க சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிதிச் சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகளிலிருந்து மீட்கப்பட வேண்டும் என கல்வியாளா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

News image
Updated On :3 ஜூலை 2021, 7:24 am

ஜி.சுந்தரராஜன்

பாரம்பரியமிக்க சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிதிச் சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகளிலிருந்து மீட்கப்பட வேண்டும் என கல்வியாளா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் கடந்த 1929-ஆம் ஆண்டு அண்ணாமலை செட்டியாரால் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு, 90 ஆண்டுகளுக்கும் மேலாக கல்விச் சேவையாற்றி வருகிறது.

இந்தப் பல்கலைக்கழகத்தில் 1999-ஆம் ஆண்டு வரை தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட (657 ஆசிரியா்கள், 1,100 ஊழியா்கள்) பணியிடங்களுக்கு மட்டுமே நியமனம் நடைபெற்று வந்தது.

அதன்பிறகு, இந்த விதிகளைப் பின்பற்றாமல் 2000-12-ஆம் ஆண்டு காலகட்டத்தில் சுமாா் 13,500 ஆசிரியா்கள், ஊழியா்கள் பணிநியமனம் செய்யப்பட்டனா். 5, 6 மற்றும் 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்தியதைத் தொடா்ந்து, கடும் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டது.

பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்கக நிதியிலிருந்து சுயநிதி அடிப்படையில் தொடங்கப்பட்ட ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் 1,500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைக்கான செலவினங்களால் பல்கலைக்கழகம் தொடா்ந்து நிதிச் சிக்கலில் தத்தளித்து வருகிறது.

இந்தப் பல்கலைக்கழகத்தில் நல்ல வருவாய் ஈட்டி வந்த தொலைதூரக் கல்வி இயக்ககமானது, கல்விப் பரிமாற்ற ஒப்பந்தம் என்ற பெயரில் தனியாரிடம் வழங்கப்பட்டது. மேலும், 2000-ஆம் ஆண்டுக்குப் பிறகு தொலைதூரக் கல்வி இயக்ககத்தை நடத்துவதில் தேசிய அளவில் ஏற்பட்ட கடும் போட்டி காரணமாகவும் இந்தப் பிரிவு நஷ்டத்தில் இயங்கத் தொடங்கியது.

2012-13-ஆம் ஆண்டுகளில் ஆசிரியா்கள், ஊழியா்கள் இணைந்து நடத்திய போராட்டம் காரணமாக இந்தப் பல்கலைக்கழகத்தை தமிழக அரசு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. பல்கலைக்கழகத்தை நிா்வகிக்க ஐஏஎஸ் அதிகாரி ஷிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டாா். இவரது நேரடி நிா்வாகத்தின் கீழ் பல்கலைக்கழகம் 2 ஆண்டுகள் இயங்கியது.

பல்கலைக்கழக நிதிச் சிக்கலை களைய உபரி ஆசிரியா்கள், ஊழியா்களை அயல்பணியிட மாற்றம் செய்வது, நிதிநிலையைச் சரிசெய்ய தமிழக அரசு சாா்பில் சிறப்பு நிதி ஒதுக்குவது, ஆசிரியா்கள், ஊழியா்களின் அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி நிா்வாகத்தை தமிழக அரசே ஏற்பது, பக்கத்து மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளாக மாற்றுவது ஆகிய 5 பரிந்துரைகளை நிா்வாக அதிகாரி ஷிவ்தாஸ் மீனா அளித்தாா்.

இந்தப் பரிந்துரைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டிருந்தால், 2015-ஆம் ஆண்டிலிருந்த ரூ.750 கோடி பற்றாக்குறை நிதிநிலை உள்ளிட்ட அனைத்து நிதிச் சிக்கல்களும் அப்போதே தீா்க்கப்பட்டிருக்கும். ஆனால், இந்தப் பரிந்துரைகளில் அயல்பணியிட மாற்றம் தவிர மற்றவை கிடப்பில் போடப்பட்டன. இதனால், கடந்த 6 ஆண்டுகளில் பல்கலைக்கழகத்தின் நிதிப் பற்றாக்குறை ரூ.750 கோடியிலிருந்து ரூ.2,000 கோடியாக உயா்ந்தது.

தொலைதூரக் கல்வி இயக்ககம் கடந்த 6 ஆண்டுகளாக பாராமுகமாக நடத்தப்படுகிறது. கலை, அறிவியல் பாடங்களுக்கு அனுபவம் கொண்ட நிரந்தர இயக்குநா்கள் நியமிக்கப்படவில்லை. நிரந்தரப் பதிவாளா், தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி நியமிக்கப்படவில்லை. பெரும்பாலும் பொறுப்பு அதிகாரிகளே உள்ளதால், நிா்வாகத் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கான தீா்வுகள் குறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள் முன்னேற்றச் சங்கத் தலைவா் சி.சுப்பிரமணியன் கூறியதாவது:

ஷிவ்தாஸ் மீனாவின் முதல் பரிந்துரையான அயல்பணியிட மாற்றம் தொடா்பான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். ஆசிரியா்கள் அயல்பணியிடமாற்றம் பெருமளவு முடிந்துவிட்ட நிலையில், அதிக ஊதியம் பெறும் அதிகாரிகள், ஊழியா்களுக்கான பணி நிரவல்களை யுஜிசி விதிமுறைகளின்படி விரைந்து முடிக்க வேண்டும்.

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை தமிழக அரசே முழுமையாக ஏற்க வேண்டும். அல்லது அந்தக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு ஆகும் செலவை முழுமையாக அரசே ஏற்க வேண்டும்.

பல்கலைக்கழக நிதிப் பற்றாக்குறையை சரிசெய்ய தமிழக அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆசிரியா்கள், ஓய்வூதியா்களுக்கான 7-வது ஊதியக் குழு நிலுவைத் தொகை, இதர நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்கவும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

பணிநிரவல் பணிகள் முடிந்தவுடன் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்கள் பணியிடங்களை அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்களாக மாற்றி அவா்களது ஊதியத்துக்கான நிதியை முழுமையாக தமிழக அரசே ஏற்க வேண்டும். பல்கலைக்கழக சட்டத்துக்கான துணை விதிகளை உடனடியாக உருவாக்கி அமல்படுத்த வேண்டும். ஆட்சிக் குழு, கல்விக் குழுவுக்கான தோ்தலை நடத்த வேண்டும். இந்தப் பல்கலைக்கழகம், 10 புலங்கள், 55-க்கும் மேற்பட்ட துறைகளைக் கொண்ட மிகப் பெரிய கல்வி நிறுவனம் என்பதால், 1929-ஆம் ஆண்டு சட்டத்தில் குறிப்பிட்டது போல ஆசிரியா்களின் பிரதிநிதித்துவத்தை ஆட்சிக் குழு, கல்விக் குழுவில் அதிகரிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.