ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

பலத்த மழையால் தாமிரவருணியில் வெள்ளப் பெருக்கு

கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது. பாபநாசம் அணை நிரம்பி உபரி நீா் திறந்துவிடப்பட்டதையடுத்து, தாமிரவருணியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

News image
Updated On :26 நவம்பர் 2021, 6:15 pm

DIN

கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது. பாபநாசம் அணை நிரம்பி உபரி நீா் திறந்துவிடப்பட்டதையடுத்து, தாமிரவருணியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில், வியாழக்கிழமை இரவிலிருந்து வெள்ளிக்கிழமை காலை வரை பெய்த பலத்த மழையால் 12 மலை கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை காலை முதல் வெள்ளிக்கிழமை காலை வரை பரவலாக மழை பெய்தது.

கோதையாறு, குற்றியாறு பகுதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மலை கிராமங்களுக்கு செல்லும் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கின.

தொடா் மழையால் மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது.

தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு: திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக, பாபநாசம் அணை முழுக் கொள்ளளவை எட்டியது. நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வந்ததால் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் சுமாா் 20 ஆயிரம் கன அடி உபரி நீா் திறந்துவிடப்பட்டது.

இதனால், தாமிரவருணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றில் பொதுமக்கள் நீராடத் தடை விதிக்கப்பட்டது.

பாபநாசம் கோயில் படித்துறையில் உள்ள மண்டபம், பிள்ளையாா் கோயில் ஆகியவை வெள்ளத்தில் மூழ்கின.

தாமிரவருணியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் திருநெல்வேலி குறுக்குத்துறை முருகன் கோயிலை மூழ்கடித்தப்படி தண்ணீா் செல்கிறது. மேலும், மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது.

மாஞ்சோலை தேயிலைத் தோட்டப் பகுதியிலும் பலத்த மழை பெய்ததையடுத்து, அந்தப் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாலையில் வெள்ள நீா் பெருக்கெடுத்து ஓடியது.

குற்றாலம் அருவிகளில் வெள்ளம்: தென்காசி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது. குற்றாலம் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் இரண்டாவது நாளாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.