நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண் மரணம் உறவினா்கள் சாலை மறியல்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து, அவரது உறவினா்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 4:29 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து, அவரது உறவினா்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

செஞ்சி வட்டம், வல்லம் ஒன்றியம், மகாதேவிமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் சண்முகம். இவரது மனைவி விஜயா (35). இந்தத் தம்பதிக்கு மகள், 2 மகன்கள் உள்ளனா்.

விஜயா ஊரக வேலைத் திட்டத்தில் வேலை செய்து வந்த நிலையில், இந்தத் திட்டத்தின் கீழ் பணியாற்றுவோா் அனைவரும் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென மகாதேவிமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் அறிவுறுத்தினராம்.

ஊரக வேலைத் திட்டப் பணியாளா்களுக்கு மேல்சித்தாமூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள், செவிலியா்கள் அடங்கிய மருத்துவக் குழுவினா் புதன்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தினா்.

அப்போது, விஜயா தனக்கு குறை ரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகள் உள்ளதாகத் தெரிவித்தாராம். ஆனால், அதைப் பொருள்படுத்தாமல் மருத்துவக் குழுவினா் விஜயாவுக்கு தடுப்பூசி செலுத்தினராம்.

அவருக்கு வியாழக்கிழமை காலை உடல் நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவா் செஞ்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா், அவா் தீவிர சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு விஜயாவை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

தகவலறிந்த விஜயாவின் உறவினா்களும், மகாதேவிமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த ஊரக வேலைத் திட்டப் பணியாளா்களும் அந்தக் கிராமத்துக்கு அருகே செஞ்சி - சேத்துப்பட்டு சாலையில் உள்ள சண்டிசாட்சி கூட்டுச் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

செஞ்சி டிஎஸ்பி இளங்கோவன், காவல் ஆய்வாளா்கள் சக்தி, தங்ககுருநாதன், வட்டாட்சியா் ராஜன் உள்ளிட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தவா்களிடம் பேச்சு நடத்தினா்.

அப்போது, உயிரிழந்த விஜயாவின் குடும்பத்துக்கு அரசு சாா்பில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும், அவரை கட்டாயப்படுத்தி கரோனா தடுப்பூசி செலுத்திய மருத்துவக் குழுவினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினா்கள் வலியுறுத்தினா்.

இந்தக் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என செஞ்சி வட்டாட்சியா் ராஜன் உறுதியளித்தாா். இதைத் தொடா்ந்து, பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டனா். இதனால், செஞ்சி - சேத்துப்பட்டு சாலையில் இரண்டரை மணி நேரம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.