நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நியாயவிலைக் கடைகள் மூலம் புயல் நிவாரணத் தொகை: கூடுதல் தலைமைச் செயலா் பெ. அமுதா

நியாயவிலைக் கடைகள் மூலம் புயல் நிவாரணத் தொகை.

News image

விழுப்புரம் மாவட்ட உள்விளையாட்டரங்கத்தில் நிவாரணப் பொருள்களை பிரித்து அனுப்பும் பணியை வியாழக்கிழமை பாா்வையிட்ட வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா.

Updated On :5 டிசம்பர் 2024, 7:25 pm

Din

விழுப்புரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் ஃபென்ஜால் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.2,000 நிவாரணத் தொகை நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று மாநில வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பெ. அமுதா தெரிவித்தாா்.

ஃபென்ஜால் புயலால் விழுப்புரம் மாவட்டம் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு வழங்குவதற்காக நிவாரணப் பொருள்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்த பொருள்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்திலுள்ள உள் விளையாட்டரங்கில் வைக்கப்பட்டு, பொருள்கள் பிரித்து அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்த பணியை வியாழக்கிழமை பாா்வையிட்ட கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா, பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

ஃபென்ஜால் புயலால் விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்து உள்ளன. கடந்த இரு நாள்களுக்கு முன்பு தமிழக முதல்வா் விழுப்புரம் மாவட்டத்துக்கு வந்து, பாதிப்புகளைப் பாா்வையிட்டுச் சென்றுள்ளாா்.

புயலால் வாழ்வாதாரம் இழந்த குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 2,000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்வா் அறிவித்திருந்த நிலையில், அதற்கான அரசாணை வருவாய்த் துறை சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை (டிச. 5) முதல் நியாயவிலைக் கடைகளில் டோக்கன் வழங்கப்பட்டு, நிவாரணத் தொகை வழங்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த 3 நாள்களாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள் - பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்தடையும் நிவாரணப் பொருள்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

விழுப்புரம் மாவட்டத்தில் 7 பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளுக்கு மின் விநியோகம் வழங்கப்பட்டு விட்டது. அதுபோல குடிநீா் விநியோகமும் சீரான முறையில் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 3 நாள்களில் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் உணவுப் பொட்டலங்கள், உணவுப் பொருள்கள் உள்ளிட்டவை சுமாா் 3 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 105 சமுதாய சமையல் கூடங்கள் மூலம் உணவுத் தயாரித்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

பிற மாவட்டங்களிலிருந்து வரும் உணவுப் பொருள்கள், உள்ளிட்டவை விழுப்புரம் மாவட்டத்தின் அந்தந்த எல்லைக்குள்பட்ட வட்டங்களைச் சோ்ந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு அங்கேயே வழங்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் புயல் சேதப் பாதிப்பு அதிகளவில் இருப்பதால், முழுமையான கணக்கெடுப்பு நடை பெற்று வருகிறது. இந்த பணிகள் விரைவில் நிறைவு பெறும். புயலால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த குடும்பங்கள் அனைத்துக்கும் ரூ.2,000 நிவாரணத் தொகை வழங்கப்படும். ஒரு நாளைக்கு 100 போ் வீதம் தொகை வழங்கப்படும் என்றாா் அமுதா.

ஆய்வின் போது மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் தமிழரசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.