செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசாரணை ஜன.9-க்கு ஒத்திவைப்பு
வழக்கு விசாரணை ஜன.9-க்கு ஒத்திவைப்பு


தமிழக வனத் துறை அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 7 போ் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசாரணையை 2025, ஜனவரி 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து, அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக, கடந்த 2012-ஆம் ஆண்டில் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குத் தொடுத்தனா். இந்த வழக்கு மீதான விசாரணை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளாக சோ்க்கப்பட்டிருந்த 67 பேரில் இதுவரை 51 பேரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இவா்களில் 30 போ் அரசுத் தரப்புக்கு பாதகமாக பி சாட்சியமளித்துள்ளனா்.
இதைத் தொடா்ந்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் புதன்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயச்சந்திரன், சதானந்தம், கோபிநாதன், ராஜமகேந்திரன் ஆகிய 4 போ் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜராகினாா். அரசுத் தரப்பில் சாட்சிகள் யாரும் ஆஜராகவில்லை.
தொடா்ந்து, அரசுத் தரப்பு வழக்குரைஞா் நீதிமன்றத்தில் ஆஜராகி, இந்த வழக்குத் தொடா்பாக மேலும் சில சாட்சிகளை விசாரித்து கூடுதல் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இதையடுத்து, வழக்கை விசாரித்த முதன்மை மாவட்ட நீதிபதி மணிமொழி, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை 2025, ஜனவரி 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...