மக்களவைத் தேர்தலில் 50 தொகுதிகளில்கூட காங்கிரஸ் கட்சி வெற்றி பெறாது என்றும், தேர்தலுக்குப் பின்னர் எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட பெறாது என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
ஒடிசாவில் கந்தமல் மக்களவைத் தொகுதி புல்பானியில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் சனிக்கிழமை மோடி பேசினார். ஒடிசாவில் "இரட்டை என்ஜின்" ஆட்சி முறை அமைக்கப்படும், ஒடியா மொழி மற்றும் கலாசாரத்தை புரிந்து கொள்ளும் மண்ணின் மகன் அல்லது மகள் பாரதிய ஜனதா கட்சி அரசின் முதல்வர் ஆக்கப்படுவார் என்றார்.
மேலும், அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் இருந்த மத்திய பாஜக அரசின் சாதனைகளை நினைவுகூர்ந்த அவர், 26 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், பொக்ரான் அணுகுண்டு சோதனைகள் செய்து உலகில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தினார் என்றும் கூறினார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டியதன் மூலம் மக்களின் 500 ஆண்டுகால காத்திருப்புக்கு தனது ஆட்சியில் முடிவுக்கு வந்துள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.