கடலில் தத்தளித்த பள்ளி மாணவர்கள் இருவர் மீட்பு; ஒருவர் மாயம்
சென்னை, காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் கடலில் குளித்த 6-ஆம் வகுப்பு மாணவர் தண்ணீரில் மூழ்கி மாயமானார். இரு மாணவர்கள் கடலில் இருந்து மீட்கப்பட்டனர்.
சென்னை, காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் கடலில் குளித்த 6-ஆம் வகுப்பு மாணவர் தண்ணீரில் மூழ்கி மாயமானார். இரு மாணவர்கள் கடலில் இருந்து மீட்கப்பட்டனர்.
தண்டையார்பேட்டை நேதாஜி நகரைச் சேர்ந்தவர் தமிமுன் அன்சாரி (11). இவர், அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த அன்சாரியின் நண்பர்கள் நூர் முகமது (11), முகமது ஆசாத் (12). இவர்களும், அதே பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், 3 பேரும் காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்குச் செவ்வாய்க்கிழமை சென்றனர். அங்கு கடலில் இறங்கி 3 பேரும் குளித்தனர். அப்போது அங்கு வந்த பெரிய அலையில் 3 பேரும் சிக்கிக் கொண்டனர். இதைப் பார்த்த அந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவர் சிங்கம் உள்ளிட்டோர், கடலில் தத்தளித்த மாணவர்கள் நூர் முகமது, முகமது ஆசாத் ஆகியோரை மீட்டனர். ஆனால் தமிமுன் அன்சாரி கடலில் மூழ்கி, காணாமல்போனதால் அவரை மீட்க முடியவில்லை.
இதில் மீட்கப்பட்ட நூர் முகமது உடனடியாக தண்டையார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முகமது ஆசாத், கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மாயமான தமிமுன் அன்சாரியைத் தேடி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.