"மனிதகுல வரலாற்றைப் பறைசாற்றும் தமிழர் ஓவியங்கள்'
பண்டைத் தமிழர்கள் தீட்டிய ஓவியங்கள் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் வரலாற்றை பறைசாற்றும் வகையில் உள்ளதாக தமிழ் வளர்ச்சித்துறையின் கீழ் செயல்படும் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடத்தின் பொறுப்பாளர்
பண்டைத் தமிழர்கள் தீட்டிய ஓவியங்கள் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் வரலாற்றை பறைசாற்றும் வகையில் உள்ளதாக தமிழ் வளர்ச்சித்துறையின் கீழ் செயல்படும் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடத்தின் பொறுப்பாளர் பேராசிரியர் ஆ.மணவழகன் கூறினார்.
"தென்னிந்தியாவின் நவீன ஓவிய சிற்ப இயக்கத்தின் தந்தை' எனப் போற்றப்படும் சிற்பி தனபால் நூற்றாண்டு விழா சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. லண்டனில் செயல்பட்டு வரும் கலை மையம் அமைப்பு, தமிழ் வளர்ச்சித்துறை ஆகியவை இணைந்து நடத்திய விழாவுக்கு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் கோ.விசயராகவன் தலைமை வகித்தார்.
இதில் பேராசிரியர் ஆ.மணவழகன் பேசியது: மொழிகளுக்கு முந்தியது
சித்திரம் எனப்படும் ஓவியம். தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் காணக் கிடைக்கும் பாறை ஓவியங்களும் அதைத்தான் காட்டுகின்றன. சங்க இலக்கியம் ஓவியரைக் "கண்ணுள் வினைஞர்' என்கிறது. சுவற்றோவியம், துணியோவியம், தோல் ஓவியம், பாறையோவியம் எனப் பல தன்மையிலான ஓவியங்களை இலக்கியங்கள் காட்டுகின்றன. பண்டைத் தமிழர்கள் தீட்டிய ஓவியங்கள் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் வரலாற்றை பறைசாற்றும் வகையில் உள்ளன.
Advertisement
Advertisement
கலைத் துறையில் 60 ஆண்டுகள்: தமிழ் மரபுக் கலையில் தனக்கான இடத்தை அடைந்தவர் சிற்பி தனபால். தன் வாழ்நாளில் அறுபது ஆண்டுகளை கலைக்காக அர்ப்பணித்தார். சென்னை மயிலாப்பூரில் நடுத்தரக் குடும்பத்தில் கடந்த 1919-ஆம் ஆண்டு பிறந்த தனபால், சிறுவனாக இருக்கும்போதே ஓவியத்தின் மீது பேரார்வம் கொண்டிருந்தார். இதையடுத்து சென்னையில் உள்ள அரசு கவின் கலைக் கல்லூரியில் 37 ஆண்டுகள்கலைகள் பயிற்றுவித்தல் பணியைச் சிறப்பாகச் செய்தார். தொடக்கக் காலத்தில் வண்ண ஓவியங்களிலும், கோட்டுச் சித்திரங்களிலும் மேற்கத்திய நவீன சாயலுடன் தென்னிந்திய புராதன, கிராமிய ஓவிய சிற்பங்களின் அழகியலைப் படைத்தார். அவருக்கென்று தனியாக ஒரு பாணி இருந்தது. அவரால் உருவாக்கப்பட்ட பல தேசியத் தலைவர்கள், கலைஞர்கள், இலக்கிய மேதைகள் ஆகியோரின் உருவச் சிற்பங்கள் புகழ் பெற்றவையாகும் என்றார்.
முன்னதாக ரயில்வே சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் பேசுகையில், மரபுக் கலைகளை வளர்க்கும் கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என வலியுறுத்தினார். விழாவில், மணல் வீடு இதழாசிரியர் மு.அரிகிருஷ்ணன், கலை இயக்குநர் தோட்டா தரணி, ஓவியர் ராகவன் உள்ளிட்டோர் கலை மையத்தின் சார்பில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.