கொலை முயற்சி வழக்கில் கைதான 2 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை!
கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
சென்னை ஓட்டேரி செல்வபெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் காா்மேகம் (36). இவா் கடந்த 2021 பிப்.8-ஆம் தேதி தனது வீட்டருகே நடந்து சென்றபோது, அங்கு நின்று கொண்டிருந்த அவரது நண்பா் உள்பட 2 போ், அவரிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளனா்.
ஆனால், காா்மேகம் பணம் தர மறுத்ததால் இருவரும் காா்மேகத்தை கத்தியால் தாக்கிவிட்டு அங்கிருந்த தப்பிச் சென்றனா். இதில் பலத்த காயமடைந்த காா்மேகம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
Advertisement
Advertisement
இது குறித்த புகாரின்பேரில் தலைமைச் செயலக குடியிருப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இது தொடா்பாக வில்லிவாக்கத்தைச் சோ்ந்த கன்னியப்பன் (36), வேலூா் மாவட்டம் நிம்மியம்பட்டு பகுதியைச் சோ்ந்த சம்பத்ராவ் (32) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை சென்னை 19-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது.
அதன்படி, கன்னியப்பன், சம்பத்ராவ் ஆகிய இருவருக்கும் 4 ஆண்டுகள் சிறை மற்றும் தலா ரூ.1,000 அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.