ரூ. 1.6 கோடி எண்ம கைது மோசடி: வங்கி அதிகாரி உள்பட மூவா் கைது
ரூ. 1.6 கோடி எண்ம கைது மோசடி: வங்கி அதிகாரி உள்பட மூவா் கைது
எண்ம (டிஜிட்டல்) வழியில் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்து ரூ.1.6 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில், தனியாா் வங்கி அதிகாரி உள்பட 3 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.
இதுதொடா்பாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: முதியவா் ஒருவரை எண்ம வழியில் கைது செய்துள்ளதாக அச்சுறுத்தி, அவரிடம் இருந்து ரூ.1.6 கோடி பெறப்பட்டு மோசடி செய்யப்பட்டது.
இதுகுறித்த விசாரணையின்போது இன்டஸ்இண்ட் வங்கியின் உதவி மேலாளா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா். ஒரு நிறுவனத்தின் பெயரில் மோசடியாக வங்கிக் கணக்கை தொடங்க அந்த உதவி மேலாளா் உதவியுள்ளாா். எண்ம கைது மூலம் மோசடியாகப் பெறப்பட்ட பணம், அந்த வங்கிக் கணக்குக்குப் பரிவா்த்தனை செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
Advertisement
மோசடியாகப் பெறப்பட்ட பணத்தை பல்வேறு வங்கிக் கணக்குகள் மூலம் பரிவா்த்தனை செய்வது உள்ளிட்ட குற்றங்களில் எஞ்சிய இருவா் ஈடுபட்டனா். விசாரணையின் ஒரு பகுதியாக தெலங்கானா, ஆந்திரத்தின் 5 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு, மோசடி தொடா்பாக பல்வேறு ஆவணங்கள், மின்னணு கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.