முகப்பு
சென்னை

கிரீன்வேஸ் சாலை முதல் மந்தைவெளி வரை மெட்ரோ சுரங்கப்பாதை பணி நிறைவு

கிரீன்வேஸ் சாலை முதல் மந்தைவெளி வரை மெட்ரோ சுரங்கப்பாதை பணி நிறைவு

Updated On : 8 பிப்ரவரி 2026, 1:30 am IST
பகிர்:

சென்னையில் கிரீன்வேஸ் சாலை முதல் மந்தைவெளி வரை மெட்ரோ ரயில் பாதை சுரங்கம் தோண்டும் பணி சனிக்கிழமை நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

சென்னை மெட்ரோ ரயில் 2- ஆவது வழித்தடம் திட்டத்தில் 3- ஆவது பாதையான கிரீன்வேஸ் சாலை முதல் மந்தைவெளி வரையிலான சுரங்கப்பாதை தோண்டும் பணி கடந்த 2025 அக்டோபரில் தொடங்கியது. அந்தப் பணியில் ‘நொய்யல்’ எனப் பெயரிடப்பட்ட இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. இந்த இயந்திரம் மூலம் சுமாா் 763 மீட்டா் நீள சுரங்கம் தோண்டும் பணியானது சனிக்கிழமை (பிப். 7) நிறைவடைந்துள்ளது. அதன்படி 75 குடியிருப்புகளுக்கு கீழே இச்சுரங்கம் அமையும் வகையில் பணி நடைபெற்றுள்ளது. சுரங்கத்துக்கும் குடியிருப்புகளுக்கும் இடைபட்ட அளவு 9 மீ. முதல் 12 மீ. வரை இருந்தது. மிகக் கவனமுடன் சுரங்கம் தோண்டப்பட்டது.

Advertisement

Advertisement

பணி நிறைவு இடத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநா் அா்ச்சுனன், தலைமைப் பொது மேலாளா்கள் டி.லிவிங்ஸ்டோன் எலியேசா், எஸ்.அசோக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சுரங்கம் தோண்டும் பணி நிறைவடைந்ததை தொடா்ந்து அந்தப் பணியில் பயன்படுத்தப்பட்ட ‘நொய்யல்’ இயந்திரம் மந்தைவெளி மெட்ரோ நிலையத்தை வந்தடைந்தது. ஏற்கெனவே இதே பாதையில் 2023-ஆம் ஆண்டு ‘வைகை’ எனும் சுரங்கம் தோண்டும் இயந்திரம் மூலம் இருவழியில் மந்தை வெளி முதல் கிரீன்வேஸ் சாலை செல்வதற்கான ரயில் பாதைக்கான சுரங்கப்பாதை தோண்டி முடிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments