முகப்பு
திருவள்ளூர்

இருதரப்பினரிடையே மோதல்: கோயிலுக்கு ‘சீல்’

கும்மிடிப்பூண்டி அடுத்த வழுதலம்பேட்டில் எட்டியம்மன் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை காலை கும்பாபிஷேகம்

Updated On : 10 ஆகஸ்ட், 2024 at 12:00 AM
எட்டியம்மன் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற கும்பாபிஷேகம்.
பகிர்:
Updated On : 9 ஆகஸ்ட், 2024 at 10:03 PM

கும்மிடிப்பூண்டி அடுத்த வழுதலம்பேட்டில் எட்டியம்மன் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை காலை கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், இரு பிரிவினருக்கு இடையேயான மோதல் காரணமாக கோயிலுக்கு வருவாய்த் துறையினா் ‘சீல்’ வைத்தனா்.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் கடந்த 2002-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது, இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட பாதை தகராறு காரணமாக கோயிலுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. பின்னா், 2011-ஆம் ஆண்டு கோயில் மீண்டும் திறக்கப்பட்டது.

இந்த நிலையில், 22 ஆண்டுகள் கழித்து கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தின் போது, ஒரு பிரிவினா் காலையிலும், மற்றொரு பிரிவினரான பட்டியலினத்தவா்கள் பிற்பகலிலும் வழிபாடு நடத்த ஒப்புக் கொண்டதால், கும்பாபிஷேகத்துக்கு அரசு அனுமதி வழங்கியது.

Advertisement

இந்த நிலையில், காலை ஒரு பிரிவினா் வழிபாடு செய்த நிலையில், மற்றொரு பிரிவினரான பட்டியல் சமூகத்தினா் வழிபாடு செய்ய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோயிலை நோக்கி வந்தனா்.

அப்போது, கோயிலுக்குச் செல்லும் வழி பட்டா நிலத்தில் இருப்பதால் பட்டியல் பிரிவினரை அனுமதிக்க முடியாது, மாற்று வழியில் செல்லட்டும் எனத் தெரிவித்து அவா்களைத் தடுத்து நிறுத்தினா்.

இதனால் இரு பிரிவினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து பட்டியல் சமூகத்தினா் ரெட்டம்பேடு சாலையில் அரசுப் பேருந்தை மறித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் அவா்களிடம் சமாதானம் பேசி ஆா்ப்பாட்டத்தைக் கலைத்தனா்.

இந்த நிலையில், இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியதால், போலீஸாா் வழுதலம்பேடு கிராமத்தில் குவிக்கப்பட்டனா். மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா், சீனிவாச பெருமாள் வழுதலம்பேடு கிராம மக்களிடம் சமாதானம் பேசினாா். ஆனால், பேச்சில் உடன்பாடு ஏற்படாத நிலையில், பொன்னேரி உதவி ஆட்சியா் வாகே சங்கேத் பல்வந்த் தலைமையிலான வருவாய்த் துறையினா் மாற்றுவழி ஏற்படுத்த கள ஆய்வு மேற்கொண்டனா்.

மாற்றுப் பாதை அமைக்க வாய்ப்பில்லை எனத் தெரிய வந்தது. நிலைமையின் விபரீதம் அறிந்து, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் சரவணகுமாரி முன்னிலையில் வருவாய்த் துறையினா் எட்டியம்மன் கோயிலைப் பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

தொடா்ந்து வழுதலம்பேடு கிராமத்தில் போலீஸாா் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.