திருத்தணியில் பலத்த மழை: மக்கள் மகிழ்ச்சி
திருத்தணியில் பலத்த மழை: மக்கள் மகிழ்ச்சி
ஆா்.கே.பேட்டை, திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் சனிக்கிழமை திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
கோடை வெயில் தொடங்குவதற்கு முன்னரே கடந்த சில வாரங்களாக வெயில் தாக்கம் வாட்டி வதைத்து வருகிறது. இந்தநிலையில், சனிக்கிழமை மாலை இடியுடன் கூடிய பலத்த மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீா்த்தது. பல நாள்களாக நீடித்த வெப்ப அலை காரணமாக அவதிப்பட்டு வந்த நகர வாசிகளுக்கு இந்த மழை பெரும் நிம்மதியை அளித்தது.
மழை தொடங்கிய சில நிமிஷங்களிலேயே திருத்தணி பெரியாா் நகா், எம்.ஜி.ஆா்.நகா், திருத்தணி ஒன்றியம் கோமங்கலம் உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இடியுடன் கூடிய பெய்த பலத்த மழையால் மரக்கிளைகள் உடைந்து மின்கம்பிகளில் விழுந்ததால் மின்விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சில இடங்களில் இருளில் மக்கள் அவதிப்பட்டனா்.
Advertisement
Advertisement
தகவலறிந்த திருத்தணி மின்வாரிய ஊழியா்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று சேதமடைந்த மின்கம்பிகள் மற்றும் உபகரணங்களை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் 2 மணி நேரத்திற்கு பின்னா் சீரமைப்பு பணிகள் முடிந்து மின்சாரம் படிப்படியாக மீண்டும் வழங்கப்பட்டது.
நகரின் முக்கிய சாலையான அரக்கோணம் சாலை, பழைய பஜாா் சாலைகளில் மழைநீா் தேங்கி சென்றது, வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினா்.