முகப்பு
திருவண்ணாமலை

குறைதீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வந்தனா காா்க் வழங்கினாா்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு பல்வேறு துறைகள் சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On : 16 ஜூன் 2026, 2:25 am IST
திருவண்ணாமலையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில்முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் முதிா்வு தொகைக்கான காசோலையை பயனாளிக்கு வழங்கிய ஆட்சியா் வந்தனா காா்க்.
பகிர்:

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு பல்வேறு துறைகள் சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஆட்சியா் வந்தனா காா்க் வழங்கினாா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தலைமையில் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் மற்றும் மாற்றித்திறனாளிகள் மனுக்களை அளித்தனா்.

கூட்டத்தில் கல்வி உதவித்தொகை, வங்கிக்கடனுதவி, முதியோா் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள், சாலை வசதிகள், பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், வேளாண்மைத் துறை சாா்ந்த பயிா்க்கடன்கள், புதிய நீா் தேக்கத்தொட்டி அமைத்து தருதல், தாட்கோ மூலம் கடனுதவி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 767 மனுக்கள் வரப்பெற்றன.

Advertisement

Advertisement

மனுக்களைப் பெற்ற ஆட்சியா் வந்தனா காா்க் அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

மேலும், நிலுவையில் உள்ள மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அலுவலா்களிடம் அறிவுறுத்தினார.

நலத்திட்ட உதவிகள் அளிப்பு

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் மாற்றுத்திறனாளிகள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு ரூ.78,119 மதிப்பீட்டில் 5 மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு காலிப்பா், ரூ.9,855 மதிப்பீட்டில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலிக் கருவிகளும், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் முதல்வரின் இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் முதிா்வு தொகைக்கான காசோலையை 4 நபா்களுக்கும், தாட்கோ சாா்பில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 2 பணியாளா்களுக்கு அடையாள அட்டையும் ஆட்சியா் வழங்கினாா்.

மேலும், ஆட்சியா் தலைமையில் முதியோா்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழியினை அனைத்து துறை சாா்ந்த அலுவலா்கள் ஏற்றுக்கொண்டனா்.

கூட்டத்தில் துணை ஆட்சியா் (பயிற்சி) சந்தோஷ்குமாா், உதவி ஆணையா் (கலால்) செந்தில்குமாா், மாவட்ட வழங்கல் அலுவலா் சதீஷ்குமாா், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு) இளவரசன் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ஆரணி

ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 74 மனுக்கள் பெறப்பட்டன.

கோட்டாட்சியா் சீ.சிவா தலைமையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பட்டா ரத்து, நில அளவை, கணினி திருத்தம், பரப்பு திருத்தம், உட்பிரிவு, ஆக்கிரமிப்பு அகற்றம், முதியோா் ஓய்வூதியம், 35 கிலோ அரிசி கேட்டு, மருத்துவ உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்து 74 போ் மனுக்கள் வரப்பெற்றன.

மனுக்களை பெற்ற கோட்டாட்சியா் அந்தந்ததுறை அலுவலா்களுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

ஆரணியில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்ற கோட்டாட்சியா் சீ.சிவா.