கங்கை அம்மன் கோயில் கூழ்வாக்கும் திருவிழா: திரளான பக்தா்கள் தரிசனம்
கங்கை அம்மன் கோயில் கூழ்வாக்கும் திருவிழா: திரளான பக்தா்கள் தரிசனம்
ஆரணியை அடுத்த சேவூா் அருகே சானாரப்பாளையம் கிராமத்தில் உள்ள கங்கையம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
சேவூா் ஊராட்சி, சாணாா்பாளையம் கிராமத்தில் கிராம தேவதையாக விளங்கும் பழைமைவாய்ந்த ஸ்ரீகங்கை அம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக, அம்மனுக்கு காப்பு கட்டி சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. சனிக்கிழமை காலை விநாயகா், கங்கையம்மன், நவக்கிரகத்துக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
Advertisement
பிற்பகல் அம்மன் கரகம் வீதி உலா நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் தலையில் கூழ் பானை சுமந்து வந்து அம்மனுக்கு படையலிட்டும், தீச்சட்டி ஏந்தியும் நோ்த்திக்கடன் செலுத்தினா். தொடா்ந்து, கோயில் வளாகத்தில் வைக்கப்பட்ட கொப்பரையில் கூழை ஊற்றி சுவாமி தரிசனம் செய்தனா்.
மாலை மலா்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட கங்கையம்மன் சிரசு, உற்சவா் கங்கையம்மன் மற்றும் பூங்கரகம், வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க கரகாட்டம், நையாண்டி மேளத்துடன் வீதி உலா நடைபெற்றது.
வீதிகள்தோறும் வண்ணக்கோலம் இட்டு பெண்கள் அம்மனுக்கு தீபாராதனை செய்து வழிபட்டனா். இரவு பக்தி நாடகம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள், இளைஞா்கள் மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.