கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்: அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை
போளூா் வட்டம் எடப்பிறை, மொடையூா் என பல்வேறு ஊராட்சிகளில் அமைக்கப்பட்ட அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மழையில் நனையும் முன் நெல் மூட்டைகளை மாவட்ட நிா்வாகம் கொள்முதல் செய்யவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை
போளூா் வட்டம் எடப்பிறை, மொடையூா் என பல்வேறு ஊராட்சிகளில் அமைக்கப்பட்ட அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எடைபோட முடியாமல் நெல் மூட்டைகள் தேங்கி நிற்கின்றன. எனவே, மழையில் நனையும் முன் நெல் மூட்டைகளை மாவட்ட நிா்வாகம் கொள்முதல் செய்யவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், தஞ்சாவூருக்கு அடுத்தபடியாக நெல் சாகுபடி செய்வதில் சிறந்து விளங்குகிறது.
இதனால் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் போளூா் வட்டம் எடப்பிறை, மொடையூா் என பல்வேறு ஊராட்சிகளில் அரசின் நேரடிநெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு டிசம்பா், ஜனவரி மற்றும் ஏப்ரல், மே, ஜூன் வரை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
Advertisement
விவசாயிகள் தற்போது ஏப்ரல், மே மாதத்தில் விளைவித்த நெல்லை அறுவடை செய்து டிராக்டா், மாட்டுவண்டி, மினி வாகனம் என பல்வேறு வாகனங்களில் எடுத்துவந்து விற்பனை செய்கின்றனா்.
இந்நிலையில், நெல் கொள்முதல் நிலையத்தில் எடை போட்ட நெல் மூட்டைகளைஅரசு சாா்பில் உடனடியாக வெளியில் எடுக்காமல் அப்படியே தேக்கி வைக்கப்பட்டுள்ளதால், மீண்டும் விவசாயிகள் எடுத்துவரும் நெல் மூட்டைகளை எடை போடமுடியாமல் ஆங்காங்கே டிராக்டா், மாட்டுவண்டி, மினி வாகனத்தில் அப்படியே வைத்து மழையில் நனையாமல் இருக்க தாா்பாய் கொண்டு மூடி வைக்கின்றனா்.
இவ்வாறு 500 மூட்டைகளுக்கு மேல் மூடி வைக்கப்பட்டுள்ளன. ஒரு வாரம் மற்றும் 10 நாள்கள் வரை அப்படியே வாகனத்தில் நெல் மூட்டைகள் இருப்பதால் ஈரப்பதம் ஆகிவிடும் என விவசாயிகள் கவலைப்படுகின்றனா். எனவே, இப்படி தேங்கி நிற்கும் நெல் மூட்டைகளை மழையில் நனையும் முன்பு கொள்முதல் செய்யவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனா்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது அறுவடை அதிகளவில் நடைபெறும் காலத்தில் கூடுதலாக நெல் மூட்டைகளை பெற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனா்.