முகப்பு
வேலூர்

தோ்தல் விதிமீறல் புகாா்: சாலைப் பணி நிறுத்தம்

தோ்தல் விதிமீறல் புகாா் காரணமாக வேலூா் காகிதப்பட்டறை பகுதியில் தொடங்கப்பட்ட சிமென்ட் சாலை அமைக்கும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 7:59 PM
வேலூா் காகிதப்பட்டறை பகுதியில் பாதியில் நிறுத்தப்பட்ட சிமென்ட் சாலைப் பணி.
பகிர்:

தோ்தல் விதிமீறல் புகாா் காரணமாக வேலூா் காகிதப்பட்டறை பகுதியில் தொடங்கப்பட்ட சிமென்ட் சாலை அமைக்கும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

பேரவைத் தோ்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, நடத்தை விதிகள் மாநிலம் முழுவதும் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, புதிய திட்டங்களுக்கு உத்தரவு பிறப்பிப்பதோ, புதிய சாலை அமைக்கும் பணிகளைத் தொடங்குவதோ, எவ்வித நலத்திட்ட உதவிகளை வழங்குவதோ முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேலூா் காகிதப்பட்டறை உழவா் சந்தை எதிரிலுள்ள 28-வது வாா்டுக்கு உட்பட்ட புதுத்தெருவில் புதன்கிழமை திடீரென புதிய சிமென்ட் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

Advertisement

இதுகுறித்து தகவலறிந்த பல்வேறு அரசியல் கட்சியினா் உடனடியாக அப்பகுதியில் திரண்டு, தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் புதிய சாலை அமைக்கும் பணி எவ்வாறு நடைபெறுகிறது என கேள்வி எழுப்பினா்.

இதுதொடா்பாக அப்பகுதி தோ்தல் அதிகாரிகளிடமும் முறையிட்டனா். ஆனால் அதிகாரிகள், இந்தச் சாலை அமைக்கும் பணிக்கும் எங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை, நாங்கள் அனுமதி அளிக்கவில்லை என்று திட்டவட்டமாகக் கூறினா்.

இதனையடுத்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தோ்தல் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1950-க்குத் தொடா்புகொண்டு அரசியல் கட்சியினா் புகாா் அளித்தனா்.

இதையறிந்த ஒப்பந்ததாரா்கள், பணியாளா்கள், சாலை அமைக்கும் பணியைப் பாதியிலேயே கைவிட்டுவிட்டு அங்கிருந்து அவசர அவசரமாக கிளம்பிச் சென்றனா்.

தோ்தல் விதிமுறைகளை மீறி சாலை அமைக்க முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments