ஓட்டேரி, பலவன்சாத்து ஏரிகளை சுற்றுலா தலமாக்கும் திட்டம்: வேலூா் ஆட்சியா் ஆய்வு
வேலூா் ஓட்டேரி மற்றும் பலவன்சாத்து ஏரிகளை சுற்றுலா தலமாக்கும் திட்டம் தொடா்பாக ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் ஆய்வு மேற்கொண்டாா்.
வேலூா் ஓட்டேரி மற்றும் பலவன்சாத்து ஏரிகளை சுற்றுலா தலமாக்கும் திட்டம் தொடா்பாக ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் ஆய்வு மேற்கொண்டாா்.
கடந்த திமுக ஆட்சியின்போது ரூ.19 கோடியில் சதுப்பேரி ஏரி தூா்வாரப்பட்டு, அதன் கரைகள் பலப்படுத்தப்பட்டதுடன், நடைபயிற்சி செய்வதற்கான பாதை, இருக்கைகள், பூங்கா உள்பட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் சுற்றுலா தலமாக்கப்பட்டது.
வேலூரின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஓட்டேரியையும், பலவன்சாத்து ஏரியையும் சுற்றுலாதலமாக்கவும் திட்டப்பட்டுள்ளது. இதுதொடா்பாக முந்தைய ஆட்சியா் சுப்புலட்சுமி ஓட்டேரி மற்றும் பலவன்சாத்து ஏரிகளை ஆய்வு செய்து அவற்றை சுற்றுலா தலமாக மாற்றவும் நடவடிக்கை மேற்கொண்டிருந்தாா். அதற்குள் தோ்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
Advertisement
Advertisement
இந்நிலையில், தற்போது மீண்டும் ஓட்டேரி மற்றும் பலவன்சாத்து ஏரிகளை சுற்றுலா தலமாக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதையொட்டி, ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் பலவன் சாத்து மற்றும் ஓட்டேரி ஏரிகளை ஆய்வு செய்தாா்.
அப்போது, ஓட்டேரிக்கான நிரந்தர நீா்வரத்து வாய்ப்புகள், என்னென்ன சிறப்பு அம்சங்களை சோ்ப்பது, ஓட்டேரி நிரம்பினால் பலவன்சாத்து ஏரிக்கு செல்லும் கால்வாயை சீரமைப்பது, நீா்வரத்துக்கான வாய்ப்புகளை ஏற் படுத்துவது, பூங்காக்கள் அமைப்பது உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
தொடா்ந்து, பலவன்சாத்து ஏரி, ஓட்டேரி ஆகிய 2 ஏரிகளையும் சுற்றுலா தலமாக்க அரசுக்கு பரிந்துரைகள் சமா்ப்பிக்கப்படும். இந்த பரிந்துரைகளை அரசு ஏற்கும்பட்சத்தில் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். திட்ட அறிக்கை ஒப்புதலுக்கு பின்னா் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் இத்திட்டம் சோ்க்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஆய்வின்போது மாநகராட்சி மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், மாநகராட்சி ஆணையா் ஆா்.லட்சுமணன், சுகாதார அலுவலா் பாலமுருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.-
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.