33 ஏரிகளுக்கான உபரிநீர் இணைப்பு கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
ஊத்தங்கரை பகுதியில் 33 ஏரிகளுக்கான உபரிநீர் இணைப்பு கால்வாய்த் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
ஊத்தங்கரை பகுதியில் 33 ஏரிகளுக்கான உபரிநீர் இணைப்பு கால்வாய்த் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
ஊத்தங்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 33 ஏரிகளுக்கான பாசன விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டத்துக்கு அதன் தலைவர் எஸ்.சண்முகம் தலைமை வகித்தார். செயலாளர் வழக்குரைஞர் எஸ்.மூர்த்தி, அனைத்து வணிகர் சங்க தலைவர் செங்கோட்டையன்,பொருளாளர் காளியண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாரூர் கிழக்குப்புற கால்வாயிலிருந்து 33 ஏரிகளுக்கு உபரிநீர் கால்வாய் அமைக்கும் திட்டம் கடந்த 2005இல் அரசு அறிவித்தும் இதுவரை திட்டம் நிறைவேற்றப்படவில்லை. போதிய மழையின்மையால் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி வட்டாரப் பகுதிகளில் உள்ள மா மற்றும் தென்னை மரங்கள் காய்ந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஏரி பாசன கால்வாய்க்கு நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க அரசு ரூ.14 கோடியை 2 ஆண்டுகளாக முன்பு கிருஷ்ணகிரி வருவாய்க் கோட்டாட்சியர் வங்கி கணக்கில் செலுத்தியிருந்தும் இதுவரை விவசாயிகளுக்கு வழங்கவில்லை. கால்வாய் அமைப்பதற்கான ஒப்பந்தம் கோரும் நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.
விவசாயிகள் வீடுகளிலும் கால்வாய் அமைக்கும் வரை கருப்பு கொடி ஏற்றுவது மற்றும் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றாவிடில் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் செந்தில், ஜெகநாதன், கமலநாதன், மணி, சரவணன், தங்கவேல், துரைசாமி ,வெங்கடேசன், சதாசிவம், வெங்கடாசலம் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.