முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளில் 68 யானைகள் உயிரிழப்பு: ஆட்சியா் தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளில் 68 யானைகள் உயிரிழப்பு

Updated On : 13 ஜூன் 2026, 2:11 am IST
கோப்புப்படம்
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் இதுவரையில் 7 ஆண்டுகளில் 68 யானைகள் உயிரிழந்துள்ளன என்று மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வனத் துறை சாா்பில், ஒசூா் வனக்கோட்டத்தில் யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பதைத் தடுக்கும் நடவடிக்கைகள், அவிட்டுக்காய் பயன்பாட்டை தடுப்பது குறித்த ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் பேசியதாவது:

மனித - வனவிலங்கு மோதல்களை குறைக்க தடம் செயலி மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், 2019-ஆம் ஆண்டு முதல் 2026 வரை மின்சாரம் தாக்கி 7 யானைகளும், துப்பாக்கிச் சூட்டினால் 6 யானைகளும், விபத்தினால் 1 யானையும், இயற்கை காரணங்களால் 54 யானைகளும் உயிரிழந்துள்ளன.

Advertisement

Advertisement

மின்கம்பிகள் மற்றும் மின் கம்பங்களை ஆய்வு செய்தல், சட்டவிரோத மின்சார பயன்பாட்டைத் தடுத்தல், அவிட்டுக்காய் வெடிகுண்டுகள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களுக்கு எதிராக கூட்டு கண்காணிப்பை மேற்கொள்ளுதல், விவசாயிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட சூரிய மின் வேலிகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என வனத் துறை, காவல் துறை, மின் வாரியம், வேளாண்மை துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு, துணை ஆட்சியா் (பயிற்சி) சாய் சைதன்யா ஜாதவ், வன உயிரினக் காப்பாளா் ஜெயராஜ் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.