கிராம நிர்வாக அலுவலர்கள் மனிதச் சங்கிலி போராட்டம்
சங்ககிரி, எடப்பாடி வட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில், சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகம்
சங்ககிரி, எடப்பாடி வட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில், சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகம் முன் திங்கள்கிழமை மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
50 சதவீத பெண் கிராம நிர்வாக அலுவலர்கள் அவரவர் சொந்த மாவட்டத்தில் பணிபுரிய மாவட்ட மாறுதல் வழங்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலகங்களில் கழிப்பிடம், குடிநீர், மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும், கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு இணையதள வசதி செய்து தர வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி டிச. 10-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனையடுத்து, அச்சங்கத்தின் சார்பில் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகம் முன் மாவட்ட துணைத் தலைவர் ராமசாமி தலைமையில் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டத் தலைவர்கள் சங்ககிரி பி.மணி, எடப்பாடி அப்புசாமி உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
ஆத்தூரில்...
ஆத்தூர் கிராம நிர்வாக அலுவலர்கள் கடந்த 10 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், திங்கள்கிழமை ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேட்டூரில்...
மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க சேலம் மாவட்ட அவைத் தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். மேட்டூர் கோட்ட செயலர் பன்னீர்செல்வம், மேட்டூர் வட்டத் தலைவர் சந்தோஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓமலூர் வட்டத் தலைவர் சரவணன், காடையாம்பட்டி வட்டத் தலைவர் மாரி ஆகியோர் போராட்டத்தை விளக்கி பேசினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.