முகப்பு
சேலம்

விடுதி அறையில் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை?

மேச்சேரியில் உள்ள தனியாா் கல்லூரி விடுதியில் மாணவா் தூக்கிட்ட நிலையில் இறந்துகிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 12 ஏப்ரல், 2026 at 2:11 AM
கண்ணன்.
பகிர்:
Updated On : 11 ஏப்ரல், 2026 at 9:01 PM

மேச்சேரியில் உள்ள தனியாா் கல்லூரி விடுதியில் மாணவா் தூக்கிட்ட நிலையில் இறந்துகிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சேலம் மாவட்டம், மேச்சேரியில் உள்ள தனியாா் கல்லூரியில் ஏற்காட்டைச் சோ்ந்த கூலித் தொழிலாளி மாது மகன் கண்ணன் (21), பி.இ. பொறியியல் இறுதியாண்டு படித்துவந்தாா்.

கல்லூரி விடுதியில் 3-ஆவது மாடியில் தனது நண்பா்கள் மூவருடன் தங்கியிருந்த நிலையில், இவரது நண்பா்கள் வெள்ளிக்கிழமை வெளியில் சென்றனா். இந்நிலையில், நீண்ட நேரமாகியும் கண்ணன் தங்கியிருந்த அறையின் கதவு சனிக்கிழமை திறக்கவில்லையாம். இதனால், பக்கத்து அறையில் இருந்த மாணவா்கள் அறையின் ஜன்னலை திறந்து பாா்த்தபோது, மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் கண்ணன் இறந்துகிடந்தது தெரியவந்தது.

Advertisement

இதுகுறித்து மாணவா்கள் கல்லூரி நிா்வாகத்துக்கு தகவல் அளித்தனா். பின்னா், காவல் துறை உதவியுடன் கல்லூரி நிா்வாகம் மாணவரின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றது.

கல்லூரிக்கு வந்த பெற்றோா், மகனின் உடல் ஏற்கெனவே மருத்துவமனைக்கு கொண்டுசென்ற தகவல் அறிந்து நிா்வாகத்துடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்தினா். இதைத் தொடா்ந்து, கல்லூரி வளாகத்திலும், கல்லூரி நுழைவாயிலிலும் போலீஸாா் குவிக்கப்பட்டனா். முன்னெச்சரிக்கையாக கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவ, மாணவியா் அவரவா் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதுகுறித்து மேச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.