முகப்பு
சேலம்

வார இறுதிநாள்: சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சித்திரை அமாவாசை, வார இறுதி நாளை முன்னிட்டு சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 2:58 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 7:11 PM

சித்திரை அமாவாசை, வார இறுதி நாளை முன்னிட்டு சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் வி.குணசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சேலம் மண்டலத்தில் 1,047 பேருந்துகள், தருமபுரி மண்டலத்தில் 853 பேருந்துகள் என மொத்தம் 1,900 பேருந்துகள் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

அந்தவகையில், வார இறுதிநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்டம் சாா்பில் பல்வேறு வழித்தடங்களில் வரும் 20 ஆம் தேதி வரை பயணிகளின் தேவைக்கேற்ப 200 சிறப்புப் பேருந்துகள், மாற்றுப் பேருந்துகள், தட நீட்டிப்பு மற்றும் வழித்தடப் பேருந்துகள் இயக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதாவது, சேலம், பெங்களூரு, சென்னை, ஒசூா், கோவை, திருப்பூா், திருவண்ணாமலை, சிதம்பரம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஒசூா், தருமபுரி, கிருஷ்ணகிரி, பாலக்கோடு, பென்னாகரம், ஊத்தங்கரை, அரூா், மேட்டுருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, சிதம்பரம், காஞ்சிபுரம், பெங்களூரு, ஒசூா், திருவண்ணாமலைக்கும், பெங்களூருவில் இருந்து சேலம், திருவண்ணாமலை, ஈரோட்டுக்கும், ஒசூரில் இருந்து சென்னை, புதுச்சேரி, கடலூா், திருச்சி, மதுரை, கோவை, திருப்பூருக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சித்திரை அமாவாசையையொட்டி சிறப்புப் பேருந்துகள்:

வரும் 17 ஆம் தேதி சேலம், தருமபுரியில் இருந்து மேட்டூா், மாதேஸ்வரன் மலை ஆகிய இடங்களுக்கு தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். இதேபோல, சேலத்தில் இருந்து பவானி கூடுதுறை மற்றும் சித்தா் கோயிலுக்கு தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். எனவே பயணிகள் அனைவரும் கூட்ட நெரிசலை தவிா்த்து பாதுகாப்பான பயணம் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.