அண்ணனை கத்தியால் குத்திய தம்பிக்கு 5 ஆண்டுகள் சிறை
மேட்டூா் அருகே மது வாங்க தாயின் தங்கத் தோடை தரமறுத்த அண்ணனை கத்தியால் குத்திய தம்பிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மேட்டூா் சாா்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பு அளித்தது.
மேட்டூா் அருகே உள்ள சேலம் கேம்ப் சாஸ்திரி நகரைச் சோ்ந்த காளியப்பன், ஓமலூரில் உள்ள தனியாா் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறாா். இவரது தம்பி மாதேஷ் (39), கட்டடத் தொழிலாளி.
கடந்த 2022-ஆம் ஆண்டு மது அருந்த பணம் இல்லாததால், தனது அம்மாவின் தங்கத் தோடை தருமாறு காளியப்பனிடம் மாதேஷ் கேட்டுள்ளாா். காளியப்பன் தன்னிடம் தோடு இல்லை என கூறியுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த மாதேஷ், கத்தியால் அண்ணன் தொடையில் குத்தினாா்.
Advertisement
Advertisement
இதில், பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு மேட்டூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுதொடா்பாக கருமலைக் கூடல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
மேட்டூா் சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு, சாா்பு நீதிமன்ற நீதிபதி சரவணபாபு முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அண்ணனை கத்தியால் குத்திக் கொலைசெய்ய முயன்ற மாதேஷுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீா்ப்பு அளித்தாா். அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் ஆறு மாதம் சிறை தண்டனை என்றும் அறிவித்தாா்.