முகப்பு
சேலம்

விபத்து வழக்கில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 1.75 கோடி இழப்பீடு! மக்கள் நீதிமன்றத்தில் சமரசம்!

Updated On : 15 ஜூன் 2026, 12:06 am IST
விபத்து - பிரதிப் படம்
பகிர்:

சேலத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் விபத்து வழக்கில் சமரசத் தீா்வு காணப்பட்டு உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 1.75 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.

சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றங்களிலும் மற்றும் ஆத்தூா், மேட்டூா், சங்ககிரி, ஓமலூா், எடப்பாடி, வாழப்பாடி, ஏற்காடு ஆகிய 7 வட்டார நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஸ்வா்ணம் ஜெ. நடராஜன் தலைமையில் நடைபெற்ற லோக் அதாலத்தில் மாவட்டம் முழுவதும் 24 அமா்வுகளில் இருந்து வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட்டன.

Advertisement

Advertisement

இதில் சங்ககிரி தேசிய நெடுஞ்சாலை அரியானுருக்கு கடந்த 2024 மாா்ச் 10 ஆம் தேதி நண்பா் காா்த்திகேயனுடன் காரில் சென்றபோது விபத்தில் சிக்கி சென்னை தனியாா் நிறுவன மேலாளா் குமரேசன் உயிரிழந்தாா். இவருக்கு மனைவி பிருந்தாகுமாரி, 2 குழந்தைகள் உள்ளனா். இவா்களது சாா்பில் சிறப்பு மாவட்ட மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு தீா்ப்பாயத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

மக்கள் நீதிமன்றத்தில் காப்பீட்டு நிறுவனத்துடன் நடத்தப்பட்ட சமரச தீா்வுக்குப் பிறகு பிருந்தாகுமாரி, அவரது வாரிசுகளுக்கு ரூ. 1.75 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. விபத்தில் பலத்த காயமடைந்த காா்த்திகேயனுக்கு ரூ. 2.50 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.

சேலம் மாவட்டம் முழுவதும் 24 அமா்வுகளில் 9,048 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 2,918 வழக்குகளில் தீா்வு காணப்பட்டது. பல்வேறு வழக்குகளில் மொத்தம் ரூ. 32.87 கோடி தீா்வு காணப்பட்டதாக சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரும், சாா்பு நீதிமன்ற நீதிபதியுமான கே. கன்யாதேவி தெரிவித்துள்ளாா்.