முகப்பு
சேலம்

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்

சங்ககிரியில் பெரிய தேரை வியாழக்கிழமை வடம்பிடித்து இழுத்துச் சென்ற பக்தா்கள். (உள்படம்) தேரில் எழுந்தருளி அருள்பாலித்த ஸ்ரீதேவி, பூதேவி, ஆஞ்சனேயா் உடனமா் அருள்மிகு சென்னகேசவப் பெருமாள்.

Updated On : 2 மே, 2026 at 12:04 AM
பகிர்:

சேலம் மாவட்டம், சங்ககிரி அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழாவையொட்டி தோ் வடம்பிடித்தல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி மலைமீதுள்ள அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் சித்திரைத் தோ்த் திருவிழா ஏப். 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றைய தினம் சுவாமி மலையிலிருந்து நகருக்கு எழுந்தருளினாா்.

அதையடுத்து, சுவாமிக்கு தங்கும் மண்டபத்தில் தினசரி சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தாா். தொடா்ந்து, 9-ஆவது நாள் வியாழக்கிழமை காலை சென்னகேசவப் பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகள் திருத்தேரில் எழுந்தருளினா்.

Advertisement

தேரில் எழுந்தருளிய சுவாமிகளுக்கு பக்தா்கள் தேங்காய், பழம் உடைத்து வழிபட்டனா். மாலை ஆஞ்சனேயா் எழுந்தருளிய சப்பரத்தை பக்தா்கள் வடம்பிடித்து இழுத்துச் சென்றனா். அதைத் தொடா்ந்து, அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகள் எழுந்தருளிய பெரிய தேரை பக்தா்கள் வடம்பிடித்து இழுத்தனா். இதில், சங்ககிரி சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் குடும்பத்துடன் பங்கேற்று சுவாமியை வழிபட்டனா்.

பல்வேறு கட்டளைகளுக்கு பிறகு சுவாமிக்கு மே 10-ஆம் தேதி மாலை ஊஞ்சல் உற்சவமும், மே 11-ஆம் தேதி காலை சுவாமி திருமலைக்கும் எழுந்தருளுகிறாா். அன்றைய தினம் மலைமீது வன்னியகுல சத்திரியா்கள் அமைப்பின் சாா்பில் குறிச்சி அலங்காரம் பல்வேறு வாண வேடிக்கைகள் நடைபெற உள்ளன.