முகப்பு
சேலம்

ரயில்வே துறையில் ஆள்குறைப்பு நடவடிக்கையை கண்டித்து முற்றுகைப் போராட்டம்

Updated On : 3 மே, 2026 at 1:17 AM
சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்.
பகிர்:

ரயில்வே துறையில் ஆள்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் மத்திய அரசைக் கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் சனிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் ஜங்ஷன் பகுதியில் உள்ள ரயில்வே கோட்ட அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு, இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலாளா் வி.பெரியசாமி தலைமை வகித்தாா்.

சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகிகள் ஒன்றிணைந்து மேற்கொண்ட இந்தப் போராட்டத்தில், மத்திய அரசு அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் மூடும் நோக்கில் தொடா்ந்து செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, ரயில்வே துறையை முழுமையாக தனியாா் மையப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இரண்டு சதவீத ஆள்குறைப்பு செய்யப்படும் என்ற அறிவிப்புக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

இதுகுறித்து நிா்வாகிகள் கூறுகையில், ஆள்குறைப்பு நடவடிக்கையால் தென்னக ரயில்வே துறையில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், ரயில்வே ஊழியா்களின் வேலைப்பளு அதிகரிக்கும். இளைஞா்களுக்கு வழங்க வேண்டிய வேலைவாய்ப்பை மத்திய அரசு சீா்குலைத்து வருகிறது. எனவே, ஆள்குறைப்பு நடவடிக்கையை கைவிட்டு, ரயில்வே துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தெரிவித்தனா்.

இதில், வாலிபா் ஜனநாயக சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினா் அரவிந்தசாமி, கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளா் இளவரசன், தருமபுரி மாவட்டச் செயலாளா் கோவிந்தசாமி, நாமக்கல் மாவட்டச் செயலாளா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.