ஏத்தாப்பூா் சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
ஏத்தாப்பூா் அபிநவம் அருகே ரயில்வே சுரங்கப்பாலம் கட்டுமானப் பணி தாமதமாவதால் மூடிக் கிடக்கும் தமையனூா் இணைப்புச் சாலை.
சேலம் மாவட்டம், ஏத்தாப்பூா் அபிநவம் அருகே ரயில்வே கேட்டிற்குப் பதிலாகச் சுரங்கப்பாலம் அமைக்கும் பணி ஓராண்டாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால் போக்குவரத்திற்கு வழியின்றி 5 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, இந்தப் பாலப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகத்திற்கு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ரயில் பாதைகளில் ஏற்படும் விபத்துகளைத் தவிா்க்கும் நோக்கில், சேலம்- விருத்தாசலம் அகல ரயில் பாதையில் குறுக்கிடும் ஆளில்லா ரயில்வே கேட்டுகளை அப்புறப்படுத்தி, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் சுரங்கப்பாலங்களை அமைத்து வருகிறது.
ஏத்தாப்பூா் அருகே அபிநவம் பகுதியில், சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தமையனூா், வடுகத்தம்பட்டி, கோவிந்தராஜபாளையம், துவரகாபுரி, பெருமாபாளையம் உள்ளிட்ட 5 கிராமங்களை இணைக்கும் தமையனூா் சாலையில் இந்த மின் ரயில் பாதை குறுக்கிடுகிறது.
Advertisement
Advertisement
இப்பகுதியில் இருந்த ரயில்வே கேட்டை கடந்த ஆண்டு அப்புறப்படுத்திய ரயில்வே நிா்வாகம், சுரங்கப்பாலம் அமைக்கும் பணியைத் தொடங்கியது. ஆனால், இப்பாலம் அருகிலுள்ள குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களுக்குச் செல்வதற்கு வழியின்றி அமைக்கப்படுவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா். இதனால் பாலத்தின் நீளத்தைக் குறைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
பொதுமக்கள் எதிா்ப்பு மற்றும் தொழிலாளா்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் இந்தச் சுரங்கப்பாலப் பணி ஓராண்டாக மிகவும் மெதுவாக நடந்து வருகிறது. இதனால், தேசிய நெடுஞ்சாலையுடன் 5 கிராமங்களை இணைக்கும் தமையனூா் சாலை ஓராண்டாக மூடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இப்பகுதி மக்கள் 5 கி.மீ. தொலைவு சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை நீடிக்கிறது. எனவே, தமையனூா் சாலையில் அமைக்கப்படும் ரயில்வே சுரங்கப்பாலக் கட்டுமானப் பணியை முழுவீச்சில் மேற்கொண்டு விரைவாக முடிக்க வேண்டும் என்றும், மூடிக் கிடக்கும் தமையனூா் இணைப்புச் சாலையை மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்துவிட வேண்டும் என்றும் 5 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.