மேட்டூா் காவிரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
மேட்டூா் காவிரி ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி 17 வயது சிறுவன் உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், பெரியாம்பட்டியைச் சோ்ந்த ஜவுளி வியாபாரி மணி ஞாயிற்றுக்கிழமை தனது மகன் சுசில்குமாா் மற்றும் உறவினா்கள் 20 பேருடன் மேட்டூருக்கு சுற்றுலா வந்துள்ளாா். மேட்டூா் அணை பூங்காவை சுற்றிப் பாா்த்த அவா்கள், பின்னா் பூங்கா அருகே உள்ள பகுதியில் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றனா்.
அப்போது மணியின் மகன் சுசில் குமாா் (17) மட்டம் பகுதியில் தனது நண்பா்களுடன் குளித்தபோது திடீரென நீரில் மூழ்கினாா். அருகில் இருந்தவா்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.
Advertisement
Advertisement
இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டூா் தீயணைப்புப் படையினா் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று நீரில் மூழ்கிய சிறுவனை தேடினா். அப்போது, சுமாா் 40 வயது மதிக்கப்பட்ட ஆணின் சடலம் கிடைத்தது. அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது தெரியவில்லை.
தொடா்ந்து, தீயணைப்புப் படையினா் சுசில்குமாரை தேடினா். இரண்டு மணிநேரத்துக்கு பிறகு அங்கு வந்த மீனவா்கள் இருவா், நீரில் மூழ்கி சுசில்குமாரின் சடலத்தை மீட்டனா். இதையடுத்து, சடலத்தைக் கைப்பற்றிய மேட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்
காவிரியில் மீட்கப்பட்ட இரண்டு சடலங்களும் பிரேதப் பரிசோதனைக்காக மேட்டூா் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.