திண்டுக்கல்லில் கிராம நிர்வாக அலுவலர்கள் மனிதச் சங்கிலி போராட்டம்
இருபத்தியோரு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் கிராம நிர்வாக அலுவலர்கள், திண்டுக்கல்
இருபத்தியோரு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் கிராம நிர்வாக அலுவலர்கள், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன் திங்கள்கிழமை மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராம நிர்வாக அலுவலர் பணியை தொழில்நுட்பப் பணியாக வரையறை செய்ய வேண்டும், மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 21அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அந்தந்த வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் முருகன் தலைமை வகித்தார். இதில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கோட்டத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், கருப்புப் பட்டை அணிந்து வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபாலுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராஜரத்தினம் கூறியது: சிவகங்கை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வருவாய் நிர்வாக ஆணையரின் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க சென்ற சுகாதார ஆய்வாளர் மோகன், திருப்பத்தூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இதற்கு வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் இரங்கல் தெரிவிக்கவில்லை. அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூட கூறவில்லை. அதனைக் கண்டித்து கருப்பு பட்டை அணிந்துள்ளோம் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.