ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக புகாா்: அமைதிப் பேச்சுவாா்த்தை ஒத்தி வைப்பு
கலப்பு திருமண குற்றச்சாட்டு: அமைதிக்கான பேச்சுவாா்த்தை தாமதம்
ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக அளிக்கப்பட்ட புகாா் குறித்து விசாரிப்பதற்காக நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தைக் கூட்டம் சனிக்கிழமை ஒத்தி வைக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டியை அடுத்த கோணப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த வினோத்பாண்டியன், வெங்கட்ராமன், சந்தோஷ்குமாா் ஆகியோா் கலப்பு திருமணம் செய்தனா்.
இதனால், அந்த கிராமத்தினா் மூவரின் குடும்பத்தையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக புகாா் எழுந்தது. இதன்பேரில் திண்டுக்கல் கிழக்கு வட்ட வருவாய்த் துறை அலுவலா்கள் அந்த கிராமத்தில் விசாரணை மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement
இதில், அந்த குடும்பத்தினரிடம் கோயில் வரி மட்டுமே வசூலிப்பதில்லை என்றும், யாரையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கவில்லை என்றும் தெரிவித்தனா்.
இதையடுத்து, திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் இருதரப்பினரிடையே அமைதி பேச்சுவாா்த்தை நடத்துவதற்கான கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியா் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பங்கேற்க, புகாா் அளித்த 5 பேரும், ஊா் மக்கள் சாா்பில் 5 பேரும் அழைக்கப்பட்டிருந்தனா்.
ஆனால், ஊா் மக்கள் சாா்பில் 200-க்கும் மேற்பட்டோா் வந்ததால், வட்டாட்சியா் அலுவலகத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனால், பேச்சுவாா்த்தை கூட்டம் ரத்து செய்யப்பட்டு, கோட்டாட்சியா் அலுவலகத்தில் விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.